மகாத்மாவின் கொலையை மறைத்த மத்திய அமைச்சகம்
டெல்லி:
மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள பாடப் புத்தரங்களில் மகாத்மா காந்தியை நாதுராம் கோட்சே சுட்டுக்கொன்றது போன்ற நாட்டின் வரலாற்றில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகள் திட்டமிட்டு மறைக்கபர்பட்டுள்ளன.
நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸ்சை சேர்ந்தவன் என்பதாலேயே அவனது கொலைப் பாதகச் செயலை மறைக்க பா.ஜ.க. அரசுமுயல்வதாக இன்று நாடாளுமன்றத்தில் எதிர் கட்சிகள் குற்றம் சாட்டின.
ஆனால், இது தெரியாமல் புரூப் ரீடிங்கில் நடந்து விட்ட தவறு என்று மனிதவளத்துறை அமைச்சர் முரளி மனோகர் ஜோஷிமழுப்பினார்.
மத்திய பாடத் திட்டத்தின் கீழ் உள்ள பள்ளிகளின் 1,3,6,9, 11ம் வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கான புத்தகங்களை மனித வள அமைச்சகம் தயாரித்துள்ளது.
இதில் மகாத்மா காந்தியை கோட்சே சுட்டுக் கொன்ற சம்பவம் மறைக்கப்பட்டுள்ளது. இந்த செயலுக்காக பா.ஜ.க. அரசு நாட்டுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
ஆனால், இதை ஏற்க மறுத்த அமைச்சர் ஜோஷி அச்சுப் பிழை காரணமாகவே, எழுத்துப் பிழை காரணமாகவே அல்லதுமொழியாக்கம் செய்தபோதோ சில தவறுகள் நேர்ந்திருக்கலாம். காந்தி விஷயத்தில் எதையும் திட்டமிட்டு மறைக்கவில்லைஎன்றார்.
ஆனால், அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க் கட்சிகள் மேலும் பேச விடாமல் அவரைத் தடுத்து உட்கார வைத்தனர்.