வைகை என்றொரு பள்ளம்!
சிவகங்கை:
மணல் எடுக்கிறோம் என்று கூறி வைகை ஆற்றை சுமார் 5 மீட்டர் அளவுக்கு தோண்டிவிட்டார் அரை பாடி லாரிக்காரர்கள்.
இந்த மணல் அள்ளும் காண்ட்ராக்டர் கும்பலுக்கு ஜாதி, அரசியல் பின் பலம் உள்ளதால் இவர்களை அடக்க முடியாமல் பலமாவட்ட நிர்வாகங்களும் திணறி வருகின்றன.
விளைவு சோழவந்தானில் ஆரம்பித்து கிட்டத்தட்ட ராமநாதபுரம் வரை வைகையில் மணலே இல்லாமல் சுரண்டி விட்டது இந்தக்கும்பல். இதே நிலை தொடர்ந்தால் வைகை ஆறு ஓடும் இடத்தில் 50 அடிக்கு பெரிய பள்ளம் மட்டுமே மிஞ்சியிருக்கும் நிலைஉருவாகியுள்ளது.
முதலில் மதுரையில் இந்தக் கும்பல் மணல் அள்ளத் தடை விதிக்கப்பட்டது. இதனால் மதுரையில் வைகை ஆற்றுப் படுகைகொஞ்சம் தப்பியது. ஆனால், இந்த காண்ட்ராக்டர்களின் அரசியல் பின்பலம் காரணமாக சிவகங்கை போன்ற பகுதிகளில் மணல்அள்ள அனுமதி தரப்பட்டது.
ஆனால், மணலை அள்ளி விற்பதில் இந்த காண்ட்ராக்டர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ஒவ்வொருவரும்நூற்றுக்கணக்கான அரைபாடி லாரிகளை வைத்துக் கொண்டு வைகையை சுரண்டி எடுத்துவிட்டனர்.
இதனால் சிவகங்கை பகுதியில் இப்போது வைகை ஆற்றில் மணலே இல்லை. தோண்டித் தோண்டி வெறும் பள்ளமும் பாறைகளும்தான் எட்டிப் பார்க்கின்றன. இந்த நிலை தொடர்ந்தால் வைகை ஆறே வெறும் பள்ளமாக மாறிவிடும் என்பதை உணர்ந்தசிவகங்கை மாவட்ட நிர்வாகம் இப்போது இங்கு மணல் அள்ளத் தடை விதித்துள்ளது.
சிவங்கை மாவட்டக் கலெக்டர் சந்தோஷ் பாபு கூறுகையில், இதற்கு மேல் ஒரு லாரி மண் அள்ளினாலும் வைகை ஆறு மிகக்கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகும். இதனால் ஆற்றின் போக்கு பாதிக்கப்படும். இதன் காரணமாக இந்த மாவட்டமே கடும்தண்ணீர் தட்டுப்பாட்டை சந்திக்க வேண்டிய நிலை உருவாகும் என்றார்.
இதனால் சிவங்கையில் மணல் அள்ள உடனடியாக முழுத் தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
மணல் அள்ள அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் கனிமவளத்துறை துணை இயக்குனர் அடிக்கடி சோதனை நடத்துவார் என்றும்,யாராவது தடையை மீறி மணல் எடுக்க அனுமதித்தால் லைசென்ஸ் ரத்தாவதோடு, கடும் அபராதமும் விதிக்கப்படும் என்றார்.
ஆனால் மதுரையில் இதே போன்ற தடை அமலில் இருந்தும் கூட இரவு நேரங்களில் திருட்டுத்தனமாக மணலை எடுத்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். தாசில்தார்களும், போலீசாரும் வேண்டிய மாமூலைக் கறந்து கொண்டு கண்ணை மூடிக்கொள்வதால் இந்த மோசடி தடையில்லாமல் நடக்கிறது.
-->