நாகப்பாவை தமிழக அதிரடிப்படை கொன்றிருக்க வாய்ப்பில்லை: அத்வானி
டெல்லி:
நாகப்பாவை தமிழக அதிரடிப் படை கொன்றிருக்க வாய்ப்பில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி கூறியுள்ளார்.
டெல்லியில் நேற்று நள்ளிரவில் நிருபர்களிடம் பேசிய அவர், நாகப்பாவின் உடல் கர்நாடக காட்டுப் பகுதியில் தான் கிடந்தது. தமிழகஎல்லையில் இருந்து 30 கி.மீ. தூரம் உள்ளே அவரது உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.
நான் முதல்வர் ஜெயலலிதாவிடம் பேசினேன். தனது அதிரடிப்படையினர் கர்நாடக காட்டுப் பகுதிக்கு செல்வதை நிறுத்தி ஒரு மாதத்துக்கும்மேலாகிவிட்டதாகத் தெரிவித்தார்.
கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவிடம் பேசினேன். அவரும் தமிழக அதிரடிப்படை கர்நாடகத்துக்குள் வருவதை நிறுத்திவிட்டதாகக் கூறினார்.
மேலும் எனக்கு கிடைத்த தகவல்களும் (மத்திய உளவுப் பிரிவு) தமிழக அதிரடிப் படையினர் கர்நாடகத்தில் நுழைந்ததாகக் கூறவில்லை.இதனால் வீரப்பன் தனது கேசட்டில் கூறியிருப்பது போல தமிழக படையினர் சுட்டு நாகப்பா இறந்திருக்க வாய்ப்பில்லை என்றார்.
இதற்கிடையே வீரப்பனைப் பிடிக்க மத்திய அரசின் உதவியை கர்நாடக முதல்வர் கிருஷ்ணா கோரினார். டெல்லியில் இருக்கும் அவர் இதுதொடர்பாக அத்வானியிடம் கோரிக்கை வைத்தார். அக் கோரிக்கையை அத்வானி ஏற்றுக் கொண்டுவிட்டதாகத் தெரிகிறது.
இதனால் மத்தியப் படைகள் மீண்டும் வீரப்பன் காட்டுக்கு வர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே கர்நாடக நிலைமை குறித்து பிரதமர் வாஜ்பாயும் முதல்வர் கிருஷ்ணாவிடம் தொலைபேசியில் விவாதித்தார். இன்றுவாஜ்பாயைச் சந்திக்க கிருஷ்ணா நேரம் கேட்டார்.
ஆனால், அவர் குஜராத் தேர்தல் பிரச்சாரத்துக்குச் செல்வதால் இச் சந்திப்பு நடக்க வாய்ப்பில்லை.
இதனால் இன்று பிற்பகலில் கிருஷ்ணா பெங்களூர் திரும்புகிறார்.
-->












Click it and Unblock the Notifications