போலி கிரெடிட் கார்டுகள் மூலம் "ராஜ வாழ்க்கை" வாழ்ந்த 3 பேர் கைது
சென்னை:
சென்னையில் போலியாகத் தயாரிக்கப்பட்ட "கிரெடிட் கார்டு" மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்த 3 பேரைப்போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் உள்ள தி. நகர், பாண்டி பஜார், அண்ணாநகர், புரசைவாக்கம் ஆகிய இடங்களில் பல கோடி ரூபாய்மதிப்புள்ள நகைகள், ஜவுளிகள், செல்போன்கள் உள்ளிட்ட பொருட்கள் ஒரு கிரெடிட் கார்டு மூலம்வாங்கப்பட்டது.
மேலும் இவற்றுக்கான பில்கள் அனைத்தும் சென்னையில் உள்ள பல்வேறு ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக் கிளைகளில்பணமாக்கப்பட்டுள்ளன.
ஆனால் இந்த வெளிநாட்டு கிரெடிட் கார்டு போலியானது என்று தெரிய வந்தவுடன் வங்கி அதிகாரிகள் அதிர்ச்சிஅடைந்தனர். இதையடுத்து உடனடியாக இதுகுறித்துப் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த கிரெடிட் கார்டை யார் கொண்டு வருகிறார்கள் என்பது குறித்து சென்னை போலீசார்கண்காணிக்க ஆரம்பித்தனர்.
இந்நிலையில் மனோஜ்குமார், ராஜேந்திரன் ஆகியோர் அண்ணாநகரில் உள்ள ஒரு கடையில் பொருட்களைவாங்கி விட்டு இந்த போலி கிரெடிட் கார்டை நீட்டிய போது போலீசார் அவர்களைச் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.
பிடிபட்டவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் அண்ணாநகரில் எஸ்.கே. ஏஜென்சீஸ் என்ற நிறுவனத்தைநடத்தி வரும் எஸ். கிருஷ்ணமூர்த்தி என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
போலி என்று தெரிந்தும் அந்த கிரெடிட் கார்டுகளைத் தன் கடையிலேயே கிருஷ்ணமூர்த்தி பயன்படுத்தியுள்ளார்.இதற்காக அந்த இருவரிடமும் 40 சதவீத கமிஷனும் பெற்று வந்தார் அவர்.
பின்னர் அந்த மூன்று பேரையும் போலீசார் நன்கு "கவனித்ததில்" ஏராளமான உண்மைகள் வெளிவந்தன.இதுபோலவே எக்கச்சக்கமான வெளிநாட்டு கிரெடிட் கார்டுகளையும், அவற்றுக்குத் தேவையானஆதாரங்களையும் போலியாகவே தயாரித்த விவரம் தெரிய வந்தது.
அந்த கிரெடிட் கார்டுகள் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்களை அவர்களும் அவர்களுடையநண்பர்களும் வாங்கிக் குவித்தனர். சென்னை மட்டுமல்லாமல் மும்பை, பெங்களூர், ஜெய்ப்பூர், சூரத், லூதியானா,அகமதாபாத் உள்ளிட்ட பல நகரங்களிலும் அவர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டியுள்ளனர்.
மேலும் போலி கிரெடிட் கார்டுகள் மூலம் வாங்கிய பொருட்களை மும்பையில் கொண்டு போய் விற்று, பணமாக்கியஅவர்கள், பல நட்சத்திர ஹோட்டல்களிலும் தங்கி சொகுசு வாழ்க்கை நடத்திய விவரமும் தெரிய வந்தது.
கைதான மூன்று பேரிடமிருந்தும் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள கார்கள், நகைகள், செல்போன்கள் மற்றும்ரூ.85,000 பணம் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக மேலும் பலருக்குப் போலீசார் வலை விரித்துள்ளனர். இது போன்ற போலி கிரெடிட் கார்டுகொண்டு வரும் நபர்களிடம் கடைக்காரர்களும், ஹோட்டல் உரிமையாளர்களும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
-->












Click it and Unblock the Notifications