ஐயப்ப பக்தர்கள் வேடத்தில் சென்று தாக்கியதா அதிரடிப்படை?
பெங்களூர்:
நாகப்பாவை வீரப்பன் கொல்லவில்லை என ஐக்கிய ஜனதா தளத்தின் கர்நாடக சட்டமன்றக் கட்சித் தலைவரான பி.ஜி.ஆர்.சிந்தியா கூறியுள்ளார்.
இதே கட்சியைச் சேர்ந்தவர் தான் நாகப்பா என்பது குறிப்பிடத்தக்கது. இன்று நாகப்பாவின் வீட்டுக்குச் சென்று அவரதுகுடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய சிந்தியா நிருபர்களிடம் கூறுகையில்,
நாகப்பாவை மீட்பதற்காக ஏதோ ஒரு அதிரடிப்படை வீரப்பன் கும்பல் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் தான் அவர்இறந்துள்ளார். கர்நாடக அதிரடிப்படை, தமிழக அதிரடிப்படை அல்லது இரு மாநில அதிரடிப்படைகளின் கூட்டுத் தாக்குதலில்தான் அவர் இறந்திருக்க வேண்டும்.
அதிரடிப்படை போலீசார் ஐயப்ப பக்தர்கள் வேடத்தில் காட்டுக்குள் நுழைந்து வீரப்பனைத் தாக்கிவிட்டு நாகப்பாவை மீட்கமுயன்றதாக எனக்குக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. (சிந்தியாவும் முந்தைய அரசில் போலீஸ்துறை அமைச்சராகஇருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது) இந்தத் தாக்குதலில் நாகப்பா மீது குண்டடி பட்டிருக்கலாம்.
இந்த விஷயத்தில் மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றார்.
ஐயப்ப பக்தர்கள் வேடத்தில் அதிரடிப் படை வீரர்கள் காட்டுகுள் திரிந்ததாக சில கர்நாடக காட்டுப் பகுதி ஆதிவாசிகளும்நாகப்பாவின் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
-->