கைது செய்ய முயற்சி: ஜெயலலிதாவுக்கு கருணாநிதி சவால்
சென்னை:
தேர்தலில் மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்குவதற்காகத் தன்னை இந்து மத விரோதி என்பது போல பொய்யாக விமர்சனம் செய்து கைது செய்ய முதல்வர் ஜெயலலிதா முயல்வதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
ஆனால், தன்னைக் கைது செய்ய முயற்சி நடந்தால் அதைச் சந்திக்க ஏராளமான ஆதாரங்களுடன் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார் கருணாநிதி.
நேற்று நடந்த அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில், கருணாநிதி இந்து மத விரோதி எனவும் அவரைக் கைது செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனால், கருணாநிதியைக் கைது செய்ய தமிழக அரசே முயலலாம் என்று தெரிகிறது.
இந் நிலையில் இன்று கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இல்லாத ஒன்றை நான் கூறியதாக இட்டுக்கட்டி அதிமுக பொதுக்குழுவில், என்னை இந்து விரோதி என்றும், வழக்குத்தொடர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்கள்.
ஓட்டு ஆதாயம் தேடுவதற்காக என்னை இந்து மதத்தின் விரோதி என்பது போன்ற பிரமையை உருவாக்க ஜெயலலிதா முயல்கிறார். இல்லாத ஒன்றை சொல்லி என்னைக் கைது செய்யலாம் என்று திட்டம் போடுகிறார்.
கடந்த தேர்தலில் இந்த அம்மையாரின் ஊழல் விவகாரம் காரணமாக வேட்பு மனுவை தேர்தல் கமிஷன் நிராகரித்தது. ஆனால், அதற்குக் கருணாநிதி தான் காரணம் என்று அழுது புலம்பி, வாக்காளர்களை ஏமாற்றி, பொய் சொல்லி ஓட்டு கேட்டு ஆட்சிக்கு வந்தார் இந்த அம்மையார்.
அதே போன்ற வித்தை இப்போதும் பலிக்கும் என ஜெயலலிதா பகல் கனவு காண்கிறார்.
வரப் போகும் இடைத் தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக கருணாநிதி பெரும்பான்மை மக்களின் எதிரி என்பது போல பிரச்சாரம் செய்கிறார். இதைக் காரணம் காட்டி கைது செய்ய முயன்றால் அதைச் சந்திக்க நான் தயார். மதம் குறித்த எனது பேச்சுக்கள் எதன் அடிப்படையில் அமைந்தன என்பதற்கான ஆதாரங்களுடன் நான் தயாராகத் தான் இருக்கிறேன்.
எனது நியாயத்தை எடுத்துரைக்க, காங்கிரஸ் ஆட்சியில் தடை செய்யப்பட்டு எம்.ஜி.ஆர். ஆட்சியில் தடை நீக்கம் செய்யப்பட்ட பெரியாரின் குரல் மற்றும் காஞ்சிப் பரமாச்சாரியார் எழுதிய தெய்வத்தின் குரல் ஆகிய புத்தகங்களும் பிற கருத்துக் களஞ்சியங்களும் ஆவணங்களும் எனக்குத் துணையாய் நிற்கும்.
குஜராததில் விஸ்வ ஹிந்து பரிஷத் இந்துத்துவாவை வைத்து ஓட்டு கேட்டு ஜெயித்ததால் தானும் அதை தமிழகத்தில் பரீட்சித்துப் பார்க்கலாம் என ஜெயலலிதா நினைத்தால் அவர் நிச்சயம் மண்ணைக் கவ்வுவார். பிரதமர் வாஜ்பாயும், துணைப் குஜராத்தில் பிரதமர் அத்வானியும் இந்துத்துவாவை வைத்து ஓட்டு கேட்கவில்லை. இந்தியா இந்து நாடாக முடியாது என்று தான் அவர்கள் கூறி வருகின்றனர்.
இவ்வாறு கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
-->