இந்தியரை தாக்கிய 2 அமெரிக்க பாதுகாப்புப் படையினர் கைது
ஒரேகான்:
இனரீதியில் இந்தியரைத் தாக்கிய 2 அமெரிக்க பாதுகாப்புப் படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மேலும் சில வெளிநாட்டினரையும் இன வெறியுடன் தாக்கியுள்ளனர்.
ஒரேகான் மாகாணத்தில் மெட்போர்ட் பகுதியில் மோட்டல் நடத்தி வரும் இந்தியரை அமெரிக்க தேசியப் பாகாப்புப் படையினர்(national guards) தாக்கினர். இதில் அவருக்கு பலத்த வெட்டுக் காயங்கள் ஏற்பட்டன.
இது குறித்துத் தகவல் அறிந்தவுடன் மெட்போர்ட் நகர போலீசார் அங்கு விரைந்து வந்து ஆண்ட்ரூ லீ பாட்டர்சன் (23), ஆரேன்செயிண்ட் ஜேம்ஸ் (25) ஆகிய இரு நேசனல் கார்ட்ஸ் படையினரைக் கைது செய்தனர்.
இவர்களுடன் சேர்ந்து இந்தியரைத் தாக்கிய இன்னொரு காவலரான சாட் ரிட்சி (21) துப்பாக்கிக் குண்டுக் காயங்களுடன் இறந்துகிடந்தார். போலீசார் கைது செய்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் தன்னைத் தானே அவர் சுட்டுக் கொண்டதாகத் தெரிகிறது.
இந்த மூவருமே இனவெறி பிடித்தவர்கள் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட இருவரிடம் போலீசார்விசாரணை நடத்தியபோது மோட்டல் அதிபரை அரேபியர் என்று நினைத்துத் தாக்கியதாகவும் அவர் இந்தியர் என்று எங்களுக்குத்தெரியாது என்றும் கூறியுள்ளனர்.
இந்த மூவருமே தெருவில் வசித்து வரும் ஒரு வெள்ளையரையும் தாக்கியுள்ளதும் தெரியவந்துள்ளது. தெருவில் வசித்துவருவதால் வெள்ளை இனத்துக்கே களங்கம் விளைவித்துவிட்டதாகக் கூறி அவரைத் தாக்கியுள்ளனர்.
செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின் வெள்ளை இனத்தவர் தவிர்த்த பிற இனத்தினர் மீது அமெரிக்காவில் தொடர் தாக்குதல்கள்நடந்த வண்ணம் உள்ளன. போலீசாரே மனித உரிமைகளை மீறி இனரீதியில் நடந்து கொள்வதும் அதிகரித்து வருகிறது.
-->