இரட்டை குழந்தை பிறந்தால்.. 2 முறை மகப்பேறு விடுப்பு எடுக்கலாமா? தெலுங்கானா ஐகோர்ட் முக்கிய உத்தரவு
ஹைதராபாத்: முதல் கர்ப்பத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறந்திருந்தாலும், அதை இரண்டு குழந்தைகளின் பிறப்பாக அல்லாமல் ஒரு பிரசவமாகவே கருத வேண்டும் என்று தெலுங்கானா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன் காரணமாக மீண்டும் அந்த பெண் கர்ப்பத்திற்காக மகப்பேறு விடுப்பு கோரிய பெண் விரிவுரையாளருக்கு 180 நாட்கள் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் மகப்பேறு லீவ் என்பது மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். தமிழ்நாட்டில் இது 365 நாட்களாக இருக்கும் நிலையில், தெலுங்கானாவில் அரசு பெண் ஊழியர்களுக்கு 180 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படுகிறது. இதற்கிடையே மகப்பேறு விடுப்பு தொடர்பாக அங்கு பெண் விரிவுரையாளர் ஒருவர் தொடர்ந்த வழக்கு கவனம் பெற்றது.

பின்னணி
மஞ்சேரியல் மாவட்டம் பெல்லம்பள்ளியில் உள்ள தெலங்கானா சமூக நல குடியிருப்பு பெண்கள் கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளராக பணியாற்றி வருபவர் ஸ்வரூபா ராணி.. இவர் சமீபத்தில் கருவுற்ற நிலையில், இரண்டாவது கர்ப்பத்திற்காக மகப்பேறு விடுப்பு கோரியிருந்தார். இருப்பினும், அவரது கோரிக்கையை அதிகாரிகள் நிராகரித்தனர். இது குறித்து கேட்டபோது, அப்பெண்ணின் முதல் கர்ப்பத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறந்திருந்ததை சுட்டிக்காட்டினர்.
அதாவது தெலுங்கானா அரசு ரூல்ஸ்படி இரண்டு குழந்தைகள் வரை மட்டுமே மகப்பேறு விடுப்பு கிடைக்கும். அதன்படி அவர் ஏற்கனவே இரண்டு குழந்தைகளின் தாய் என்பதால் மகப்பேறு விடுப்பு வழங்க முடியாது என அதிகாரிகள் கூறியுள்ளனர். அதைத் தொடர்ந்தே ஸ்வரூபா ராணி தெலுங்கானா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
வாதம்
இந்த வழக்கை நீதிபதி கே. சரத் விசாரித்தார். அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இரட்டைக் குழந்தைகள் ஒரே கர்ப்பத்தின் மூலம் பிறக்கின்றன என்பதால்.. அதை இரண்டு தனித்தனி பிரசவங்களாக கருத முடியாது என்று வாதிட்டார். மேலும், இரட்டைக் குழந்தைகள் பிறந்ததை காரணமாக காட்டி மகப்பேறு விடுப்பை மறுப்பது தன்னிச்சையான நடவடிக்கை என்றும் அது பெண்களின் அடிப்படை உரிமைகளை மீறுகிறது என்றும் தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, தெலுங்கானா அரசின் விதிகள், மத்திய அரசின் விதிகள் மற்றும் உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகளை ஆய்வு செய்தார்.
நீதிமன்றம் திட்டவட்டம்
அப்போது நீதிபதி, "மகப்பேறு விடுப்பு என்பது வெறும் பணிச்சலுகை அல்ல.. அது பெண்களின் உரிமை சார்ந்தது.. இந்திய அரசியலமைப்பின் 21வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள கண்ணியம், தனியுரிமை தொடர்புடையது" என்றார். மேலும், ஒரு பிரசவத்தில் எத்தனை குழந்தைகள் பிறந்தன என்பது முக்கியமல்ல.. எத்தனை முறை பிரசவம் நடந்தது என்பதே கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பையும் தெலுங்கானா ஐகோர்ட் மேற்கோள் காட்டியது.
இரட்டை குழந்தை
இரட்டை குழந்தைகள் முதல் கர்ப்பத்தில் பிறந்த பெண்களுக்கும் மகப்பேறு விடுப்பு வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு தனது விதிகளை திருத்தியிருப்பதையும் தெலுங்கானா உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. அதேபோல், ஆந்திரப் பிரதேச அரசு இரண்டு குழந்தைகள் என்ற கட்டுப்பாட்டையே நீக்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது. இரட்டைக் குழந்தைகள் பிறப்பது என்பது ஒரு பெண்ணின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட நடக்கும் நிகழ்வு என்பதால், அதை அடிப்படையாகக் கொண்டு மகப்பேறு விடுப்பை மறுப்பது நியாயமல்ல என்று நீதிமன்றம் கூறியது.
இதன் காரணமாக அந்த பெண்ணின் முதல் கர்ப்பத்தை "ஒரே ஒரு பிரசவம்" எனக் கருதி, இரண்டாவது கர்ப்பத்திற்கான மகப்பேறு விடுப்பை வழங்க வேண்டும் என்று தெலுங்கானா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.















Click it and Unblock the Notifications