பெற்றோரை பார்த்து கொள்ளவில்லை என்றால் "சம்பளம்" வராது.. வருகிறது புதிய சட்டம்! தண்டனைகள் என்ன?
ஹைதராபாத்: நமது நாட்டில் வயதான பெற்றோர்களை முறையாகப் பார்த்துக் கொள்ளாமல் அவர்களை அப்படியே கைவிடும் போக்கு ஆங்காங்கே அதிகரித்து வருகிறது. இதற்கிடையே வயதான பெற்றோர்களைப் பார்த்துக் கொள்ளவில்லை என்றால் சம்பளத்தில் பிடித்தம் செய்யும் புதிய மசோதாவைத் தெலுங்கானா அரசு கொண்டு வந்துள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!
இந்த காலத்தில் பெற்றோர்கள் வயதாகும் போது அவர்களை சில பிள்ளைகள் முறையாகப் பார்த்துக் கொள்வதில்லை. இதனால் அடிப்படை விஷயங்கள் கூட இல்லாமல் பெற்றோர் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். இதற்கிடையே தெலுங்கானா அரசு புதிய மசோதா ஒன்றைக் கொண்டு வந்துள்ளது.

புதிய மசோதா
'Telangana Employees Accountability and Monitoring of Parental Support Bill, 2026" என்ற இந்த மசோதா தெலுங்கனா சட்டசபையில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது. மாநிலத்தில் மூத்த குடிமக்களின் கண்ணியத்தையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதே இந்த மசோதாவின் நோக்கமாகும். அரசு ஊழியர்கள் மட்டுமின்றி மக்கள் பிரதிநிதிகள் மற்றும் தனியார் துறை ஊழியர்கள் என அனைவரையும் இந்த சட்டம் உள்ளடக்குகிறது.
இந்த மசோதா மீதான விவாதத்தில் பேசிய முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, நாட்டில் ஏற்கனவே பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம் நடைமுறையில் உள்ளதைச் சுட்டிக்காட்டினார். இருப்பினும், பெற்றோரைப் பராமரிப்பது ஒரு சமூகப் பொறுப்பு என்பதை இந்த புதிய மசோதா வலியுறுத்துகிறது என அவர் குறிப்பிட்டார்.
சம்பளம் கட்
இந்த மசோதாவின்படி, அரசு, பொது மற்றும் தனியார்த் துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் தங்கள் வயதான பெற்றோர்களைப் பார்த்துக் கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை மீறினால், இணங்கத் தவறும் ஊழியர்களின் சம்பளத்தில் 15% அல்லது ₹10,000 பிடித்தம் செய்யப்படும். அப்படி பிடித்தம் செய்யப்பட்ட தொகையானது, கவனிக்கப்படாமல் விடப்பட்ட பெற்றோர்களுக்கு நேரடியாக வழங்கப்படும். இச்சட்டம் மூத்த குடிமக்களின் அத்தியாவசியத் தேவைகளான சுகாதாரம், வீட்டுவசதி மற்றும் நிதிப் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்துகிறது.
ரேவந்த் ரெட்டி
மேலும், குழந்தைகளிடமிருந்து பராமரிப்பு கோருவதற்குப் பெற்றோர்களுக்கு முறையான உரிமையையும் இது வழங்குகிறது. இதில் எதாவது பிரச்சினை என்றால் தேவைப்படும்போது தலையிட்டு நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு இந்த மசோதா அதிகாரம் அளிக்கிறது. இந்த மசோதா மீதான விவாதத்தில் பேசிய ரேவந்த் ரெட்டி, "சமூகப் பொறுப்புணர்ச்சியுடன் மாநில அரசு இந்த மசோதாவைக் கொண்டு வந்துள்ளது. இது மற்ற சட்டங்களைப் போன்றதல்ல. மக்களிடையே ஒழுக்கத்தை வளர்க்கும் அதேநேரம் யாராவது தங்கள் பெற்றோரைப் புறக்கணித்தால், அவர்கள் சட்டத்தின் வரம்புக்குள் கொண்டு வரப்பட்டு, பெற்றோரைக் கவனித்துக் கொள்வதை உறுதிசெய்ய வேண்டும்.
உரிமை இல்லை
பெற்றோர்களைக் கவனிக்காமல் விடும் குழந்தைகளைத் திருத்துவது சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு. அதேநேரம் இதற்காக ஒரு சட்டத்தை மாநில அரசு இயற்ற வேண்டிய நிலை உருவானது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.. பெற்றோரைப் புறக்கணிக்கும் எவருக்கும் சமூகத்தில் வாழும் உரிமை இல்லை" என்று அவர் தெரிவித்தார். குறிப்பாக, தொழிலதிபர் விஜய் பத் சிங்கானியா தனது சொத்துக்களை மகனுக்கு எழுதிய பிறகு வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த மசோதாவை ஆதரித்துப் பேசிய அமைச்சர் சுரேகா, "பெற்றோர் இல்லாமல் நமக்கு வாழ்க்கை இல்லை. எனவே, அவர்களைக் கவனித்துக் கொள்வது அனைவரின் கடமையாகும்.. இளம் தலைமுறையினர் தங்கள் பொறுப்புகளைச் சரியாகச் செய்ய வேண்டும். வயதானவர்கள் மீதான சமூகத்தின் அணுகுமுறை மாற வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
பாஜகவும் ஆதரவு
பாஜக எம்.எல்.ஏ பாயல் சங்கரும் இந்த மசோதாவைப் பாராட்டினார்.. நாட்டிலேயே முதல்முறையாக இதுபோல ஒரு முயற்சி எடுக்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், தனது கட்சி இந்த மசோதாவுக்கு ஆதரவளிப்பதாகக் குறிப்பிட்டார். அதேநேரம் தண்டனைத் தொகையை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்..












Click it and Unblock the Notifications