கடற்படையுடன் மோதல்: 3 விடுதலை புலிகள் தற்கொலை
கொழும்பு:
யாழ்பாண கடல் பகுதியில் படகில் விமான எதிர்ப்பு பீரங்கிகளுடன் வந்த 3 விடுதலைப் புலிகளை இலங்கை கடற்படையும்,நார்வே அதிகாரிகளும் தடுத்தபோது படகை வெடிக்கச் செய்து தற்கொலை செய்து கொண்டனர்.
இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே ஜெர்மனியில் இன்று 5 சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகள்தொடங்கியுள்ள நிலையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
இரு ஆண்டுகளுக்கு முன் இரு தரப்பினருக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட பின்னர் நடந்துள்ள முதல் புலிகளின்தற்கொலை இதுவாகும். ஆனால், இதில் இலங்கை கடற்படையினர் யாரையும் புலிகள் காயப்படுத்தவில்லை. தங்களைத்தாங்களே வெடித்துச் சிதறியடித்துக் கொண்டுளளனர்.
இன்று காலை இச் சம்பவம் நடந்தது. நேற்று மாலை 3 புலிகளுடன் ஒரு படகு யாழ்பாணம் நோக்கி வந்தது. இந்திய பதிவு எண்கொண்ட அந்தப் படகு டெல்ப்ட் என்ற சிறிய திட்டு அருகே வந்தபோது அதை இலங்கைக் கடற்படைக் கப்பல் தடுத்து நிறுத்தியது.கடற்படையினர் புலிகளின் படகில் ஏறி அதைச் சோதனையிட முயன்றனர்.
ஆனால், அவர்களை புலிகள் அனுமதிக்கவில்லை. படகுக்குள் நுழைந்தால் சயனைட் குப்பியைக் கடித்து தற்கொலை செய்துகொள்வோம் என புலிகள் எச்சரித்தனர். இதனால் கடற்படையினர் அந்தப் படகை சுற்றி வளைத்துக் கொண்டு நார்வே நாட்டுஅமைதிக் கண்காணிப்புக் குழுவினரை துணைக்கு அழைத்தனர்.
நார்வே அமைதிக் கண்காணிப்புக் குழுவில் உள்ள கடல் கண்காணிப்புப் பிரிவைச் சேர்ந்த இரு அதிகாரிகள் இன்று அதிகாலைகடலுக்குள் சென்றனர். புலிகளின் படகுக்குள் சென்ற அவர்கள் 23 எம்.எம். விமான எதிர்ப்பு மெஷின் கன் மற்றும் விமானஎதிர்ப்பு பீரங்கி இருப்பதைக் கண்டனர்.
இதையடுத்து அந்த இரு நார்வே அதிகாரிகளும் படகை விட்டு வெளியேறினர்.
படகில் ஆயுதங்கள் இருப்பதாக அவர் கடற்படையினரிடம் தெரிவித்த அடுத்த வினாடியே அந்தப் படகுக்கு விடுதலைப் புலிகள்தீ வைத்தனர். அடுத்த சில நிமிடங்களில் படகு பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. அதில் இருந்த 3 புலிகளும் உடல் சிதறிஇறந்தனர்.
இது குறித்து நார்வே அமைதிக் கண்காணிப்புக் குழுவின் செய்தித் தொடர்பாளர் டெய்டுர் டொர்கெல்சன் கூறுகையில்,யாழ்பாணத்துக்குள் ஆயுதங்களைக் கடத்தி வந்தது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய செயலாகும் என்றார்.
ஆனால், புலிகள் தரப்பில் இருந்து இலங்கை அரசுத் தரப்பில் இருந்தும் இச் சம்பவம் குறித்து எந்தக் கருத்தும் இதுவரைதெரிவிக்கப்படவில்லை.
அமைதி முயற்சியை ராணுவமும், கடற்படையும் விரும்பவில்லை என்று புலிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில் இச்சம்பவம் நடந்துள்ளது. அமைதிப் பேச்சுக்கள் பெரும் வெற்றி அடைந்த பின்னரும் கூட கடற்படையினருக்கும் புலிகளுக்கும்இடையே அவ்வப்போது பிரச்சனைகள் வெடித்த வண்ணமே இருந்தன.
இன்றைய தற்கொலை நடந்த சில மணி நேரங்களில் புலிகள்- இலங்கை இடையிலான அமைதிப் பேச்சு ஜெர்மனியின் பெர்லின்நகரில் தொடங்கின. மனித உரிமைகளை இரு தரப்பினரும் பாதுகாப்பது குறித்து இந்தப் பேச்சுவார்த்தைகளில்விவாதிக்கப்பட்டு வருகிறது.