ஆளற்ற லெவல் கிராசிங்கில் வைகை எக்ஸ்பிரஸ் - டிராக்டர் மோதல்: ஒருவர் பலி
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே ஆளற்ற ரயில்வே கிராசிங்கைக் கடக்க முயன்ற டிராக்டர் மீது வைகை எக்ஸ்பிரஸ் ரயில்மோதியதில் அந்த டிராக்டரின் டிரைவர் உடல் நசுங்கி அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
சென்னை-எழும்பூரிலிருந்து மதுரைக்கு நேற்று பகல் வழக்கம் போல் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் கிளம்பியது.
அப்போது விழுப்புரத்தை அடுத்த வி. சாலை கொங்கராம்பூண்டி அருகே உள்ள ஆளற்ற ரயில்வே கிராசிங்கை ஒருடிராக்டர் கடக்க முயன்றது.
அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த வைகை எக்ஸ்பிரசின் டிரைவர் ரயிலை நிறுத்த முயன்றார். ஆனால் படுவேகமாக வந்த ரயில் அந்த டிராக்டர் மீது பயங்கரமாக மோதியது.
ரயில் மோதிய வேகத்தில் டிராக்டர் சுக்கு நூறாக நொறுங்கி நாலாபுறமும் சிதறியது. அந்த டிராக்டரை ஓட்டிக்கொண்டு வந்த டிரைவர் ராமலிங்கம் இந்தப் பயங்கர விபத்தில் உடல் நசுங்கி அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.மேலும் ரயிலில் இருந்த பழனி என்ற பயணி கீழே உருண்டு விழுந்து பலத்த காயமடைந்தார்.
நொறுங்கிய டிராக்டரின் பல பாகங்கள் ரயில் என்ஜினின் சக்கரத்தில் சிக்கிக் கொண்டன. ஆனாலும் சுமார் முக்கால்கி.மீ. ஓடிய பின்னரே ரயில் நின்றது.
ரயில் என்ஜின் சக்கரத்தில் டிராக்டரின் உடைந்த பாகங்கள் சிக்கிக் கொண்டதால், வைகை எக்ஸ்பிரஸ் கிளம்புவதில்தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து அருகில் உள்ள ஊர்களைச் சேர்ந்த ரயில் பயணிகள் பஸ்களில் ஏற்றி அனுப்பிவைக்கப்பட்டனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த விழுப்புரம் ரயில் நிலைய ஊழியர்கள், ரயில் சக்கரத்தைச் சரி செய்யும் பணியில்ஈடுபட்டனர். பின்னர் மாலை 5 மணிக்கு வைகை எக்ஸ்பிரஸ் மீண்டும் கிளம்பியது. விழுப்புரத்தில் வேறு என்ஜின்மாற்றப்பட்ட பின்னர் அது மதுரைக்குக் கிளம்பிச் சென்றது.
இவ்விபத்து காரணமாக இந்த ரயில் பாதையில் சுமார் 3 மணி நேரத்திற்கு ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
-->