சிறையில் வைகோவை சந்தித்தார் பெர்னாண்டஸ்
வேலூர்:
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் இன்று சந்தித்துப் பேசினார்.
நேற்று முன் தினம் பெங்களூரில் சர்வதேச போர் விமானக் கண்காட்சியை பெர்னாண்டஸ் துவக்கி வைத்தார். இருநாட்களும் பெங்களூரில் இருந்த அவர் இன்று சென்னை சென்றார். பின்னர் அங்கிருந்து இன்று பிற்பகலில்ராணுவ ஹெலிகாப்டர் மூலம் வேலூருக்குச் சென்ற பெர்னாண்டஸ், மத்திய சிறைக்குச் சென்றார்.
அங்கு வைகோவைச் சந்தித்துப் பேசினார். சுமார் ஒரு மணி நேரம் இருவரும் தனியாகச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தனர்.
பின்னர் சிறையை விட்டு வெளியே வந்த பெர்னாண்டஸ் நிருபர்களிடம் பேசுகையில்,
பொடா சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வைகோ வழக்கு தொடர்ந்துள்ளார். இந் நிலையில், அவருடையகைது விவகாரத்தில் மத்திய அரசு தலையிட முடியாது என்றார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் வைகோ கைது செய்யப்பட்ட பின்னர் அவரை பெர்னாண்டஸ் சிறையில் சந்திப்பதுஇது இரண்டாவது முறையாகும்.
தன்னை விடுவிப்பது தொடர்பாக மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லைஎன்பதால் மத்திய அரசு மீது கடும் அதிருப்தியில் உள்ளார் வைகோ. மேலும் அதிமுகவை பா.ஜ.க. மறைமுகமாகஆதரித்து வருவதால் திமுகவுடன் நெருங்க ஆரம்பித்துள்ளார்.
சாத்தான்குளத்தில் பா.ஜ.க- அதிமுக மறைமுகக் கூட்டணிக்கு எதிராக திமுகவுடன் சேர்ந்து காங்கிரசை மறைமுகமாகஆதரிக்கும் மதிமுக முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் பெர்னாண்டஸ் வைகோவைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போதைய அரசியல் சூழ்நிலைகுறித்தும் அவர்கள் பேசியதாகத் தெரிகிறது.
-->