பெண் "தாதா" கைது: கந்து வட்டி கும்பலின் தலைவி
சென்னை:
சென்னையில் லட்சக் கணக்கான ரூபாய் கடன் கொடுத்து, கந்து வட்டி வசூல் வேட்டையாடி வந்த பொம்மி என்றபெண் ரவுடியைப் போலீசார் கைது செய்தனர். வட்டி தராதவர்களை அடியாட்கள் மூலம் கத்தியைக் காட்டி கொலைசெய்து விடுவதாக அவள் மிரட்டி வந்ததும் தெரிய வந்துள்ளது.
சென்னை-அரும்பாக்கத்தைச் சேர்ந்த பொம்மி கடந்த சில ஆண்டுகளாகவே கந்து வட்டி வசூலில் கொடிகட்டிப்பறந்து கொண்டிருந்தாள். ஏராளமான மக்கள் அவளிடமிருந்து ரூ.30 லட்சம் வரை கடன் வாங்கியுள்ளனர்.
அவர்களிடமிருந்து மீட்டர் வட்டி, கந்து வட்டி என்று பலவிதமான வட்டிகளைப் போட்டு அவர்களைக் கதறடித்துக்கொண்டிருந்தாள் அவள்.
இந்த அநியாய வட்டியைச் சரியாகக் கட்ட முடியாத அப்பாவி மக்களை, வேறு சில ரவுடிகளின் உதவியுடன்கத்தியைக் காட்டிக் கடத்திச் சென்று கொன்று விடப் போவதாக மிரட்டிய சம்பவங்களும் நடந்துள்ளன.
இன்னும் சிலரை மிரட்டி, அவர்களுடைய சொத்துக்களையும் பொம்மி எழுதி வாங்கியுள்ளாள்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிலர் பொம்மியைப் பற்றிப் போலீசாரிடம் புகார் அளிக்க ஆரம்பித்தனர்.இதையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து இன்று பொம்மியைக் கைது செய்தனர்.
மக்களிடம் அநியாயமாக வட்டி வசூலித்தது, கொலை மிரட்டல் விடுத்தது ஆகியவற்றின் கீழ் பொம்மி மீதுவழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
-->