கம்ப்யூட்டர்களை திருடி குப்பை வண்டியில் "அள்ளிச்" சென்ற திருடர்கள்
சென்னை:
திருடிய கம்ப்யூட்டர்களை நகராட்சி குப்பை வண்டியில் அள்ளிப் போட்டுக்கொண்டு சென்ற 2 பேரை சென்னை அருகே போலீஸார் கைதுசெய்தனர்.
சென்னை அருகே அம்பத்தூரை ஒட்டியுள்ளது வரதராஜபுரம். இப் பகுதியில் போலீஸார் வழக்கமான இரவு ரோந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது அம்பத்தூர் நகராட்சிக்குச் சொந்தமான குப்பை வண்டியை 2 பேர் தள்ளிக் கொண்டு வந்தனர்.
இந்த நேரத்தில் நகராட்சி ஊழியர்கள் என்ன செய்கிறார்கள் என்று சந்தேகப்பட்ட போலீஸார் வண்டியை நெருங்கினர். அப்போது குப்பைவண்டியில் 4 கம்ப்யூட்டர்கள் இருந்தன. குப்பை வண்டியில் கம்ப்யூட்டரா என்று போலீஸார் அதிர்ந்தபோது, 2 பேரில் ஒருவன்தப்பியோடினான்.
மற்றவனை போலீஸார் சுதாரித்து பிடித்துக் கொண்டனர். அவனிடம் விசாரித்தபோது இருவரும் நகராட்சி ஊழியர்கள் இல்லை என்றுதெரியவந்தது. இருவரும் முதலில் குப்பை வண்டியைத் திருடியுள்ளனர்.
பின்னர் சுரேஷ் குமார் என்பவரது அலுவலகத்தில் இருந்த 4 கம்ப்யூட்டர்களைத் திருடினர். அதை குப்பை வண்டியில் போட்டுக் கொண்டுஹாயாக கிளம்பியுள்ளனர். வழியில் போலீஸாரிடம் மாட்டிக் கொண்டனர்.
போலீஸில் சிக்கியவன் பெயர் பாக்யராஜ். தப்பியவன் பெயர் சேகர். அவனையும் போலீஸார் பின்னர் பிடித்துவிட்டனர். கம்ப்யூட்டர்திருடிய இருவரும் இப்போது கம்பி எண்ணிக் கொண்டுள்ளனர்.
-->