பாலசிங்கத்துக்கு உடல் நலக் குறைவு: லண்டன் விரைகிறார்
கொழும்பு:
விடுதலைப்புலிகளின் அரசில் ஆலோசகரான ஆன்டன் பாலசிங்கத்துக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால்அவர் தன்னுடைய இலங்கைப் பயணத்தை அவசர அவசரமாக முடித்துக் கொண்டு லண்டன் திரும்புகிறார்.
இந்நிலையில் கடந்த மாதம் 21ம் தேதி இலங்கை அரசுடனான பேச்சுவார்த்தையைப் புலிகள் திடீரெனநிறுத்திவிட்டனர். யாழ்ப்பாணம் உள்ளிட்ட வட கிழக்குப் பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள ராணுவத்தினரை அரசுவாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி பேச்சுவார்த்தையைநிறுத்திக் கொண்டனர் புலிகள்.
இருப்பினும் மீண்டும் பேச்சுக்களைத் தொடர்வது குறித்து ஆலோசிப்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்இலங்கைக்கு வந்தார் பாலசிங்கம். தன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இருக்கும் கிளிநொச்சி காட்டுப்பகுதிக்குச் சென்று அவரை பாலசிங்கம் சந்தித்தார்.
இருவரும் பேச்சுக்களை மீண்டும் தொடங்குவது குறித்து விவாதித்து வந்தனர். நார்வே தூதுக் குழுவில் உள்ளவிடார் ஹெல்கெசன், எரிக் சோல்ஹைம், இலங்கைக்கான ஜப்பான் நாட்டின் சிறப்புத் தூதர் யாஷூஷி அகாஷிஉள்ளிட்டவர்களும் புலிகளின் தலைவர்களைச் சந்தித்து விவாதித்தனர்.
இந்நிலையில் பாலசிங்கத்துக்குத் திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தன் மனைவிஅடேல் பாலசிங்கத்துடன் கிளிநொச்சியிலிருந்து நேற்று மாலை கொழும்புவுக்குத் திரும்பினார்.
இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டரில் கொழும்பு வந்திறங்கிய பாலசிங்கம் தம்பதியர் இன்றுலண்டன் புறப்பட்டுச் செல்வார்கள் எனத் தெரிகிறது. அங்கு பாலசிங்கத்துக்கு டயாலிசிஸ் சிகிச்சைமேற்கொள்ளப்படும்.
உடல் நலக் குறைவு காரணமாக தான் லண்டனுக்குத் திரும்பினாலும் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் தொடர்ந்துநடைபெற வேண்டும் என்று மற்ற புலித் தலைவர்களிடம் பாலசிங்கம் கேட்டுக் கொண்டுள்ளார்.