பொடா: திமுகவை ஒதுக்கிய மார்க்சிஸ்ட்
கோவை:
எதிர்க்கட்சிகளை அதிமுக அரசு பகைவர்கள் போல நடத்துகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா கூறியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சட்டசபையில் எதிர்க்கட்சியினருக்கு பேசவே அனுமதி தரப்படுவதில்லை. அவர்கள் பகைவர்கள் போலத் தான் நடத்தப்படுகிறார்கள். அடுத்த கட்சிகளை அரசு மதிக்க வேண்டும். மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்களின் உரிமைகளுக்கு மதிப்பு தர வேண்டும்.
பொடா சட்டத்திற்கு எதிராக சென்னையில் வருகிற 29 ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெறவுள்ள கருத்தரங்கில் கலந்து கொள்ள திமுகவுக்கு அழைப்பு அனுப்பப்படாது. நாங்கள் பொடா சட்டத்தை நாடு முழுவதிலும் இருந்தும் வாபஸ் பெற வேண்டும் என்று கோருகிறோம். ஆனால் திமுகவோ, தமிழகத்தில் மட்டும் வாபஸ் பெறச் சொல்கிறது.
கருத்தரங்கில் கலந்து கொள்ளுமாறு அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் அழைப்பு அனுப்பியுள்ளோம். திமுகவுக்கு மட்டும் அனுப்பவில்லை என்றார் அவர்.