தவெக அரசு கவிழாது.. நாங்க இருக்கோம்! விரைவில் விஜய் தலைமையில் கூட்டணி! அந்தர் பல்டி அடித்த திருமா!
திருவாரூர்: தவெக அரசு ஆறு மாதத்தில் கவிழும் என திமுக தலைவர்கள் கூறி வரும் நிலையில், தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்கும். இது மக்களின் கட்டளை அந்த ஆட்சி கவிழ்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். மேலும், நாங்கள் தமிழக வெற்றிக்கழக ஆட்சியில் பங்கு பெற்றுள்ளோம் கூட்டணிக்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். விரைவில் தவெக தலைமையில் ஒரு கூட்டணி அமையும் எனவும் தெரிவித்துள்ளார்.
திருவாரூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்," சபரிவர்மன் கொலையில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். என்றால் கூட அதனை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

எனவே சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என்று பொதுமக்களின் கோரிக்கையை ஏற்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுகிறோம். தவெக அரசு ஆறு மாதத்தில் கவிழும் என திமுக தலைவர்கள் கூறுகின்றனர்.
திருமாவளவன்
தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்கும். இது மக்களின் கட்டளை. அந்த ஆட்சி கவிழ்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என தெரிவித்துக் கொள்கிறேன். மதுரை மற்றும் சேலத்தில் எனது போஸ்டர் சேதப்படுத்தியது குறித்த கேட்கிறீர்கள். இது தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறது நாங்கள் யாருக்கும் எதிரானவர்கள் இல்லை. ஆனாலும் சமூக விரோத சக்திகள் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் செயல்படுவது கவலை அளிக்கிறது.
தவெக ஆட்சி
குறிப்பாக இந்த ஆட்சிக்கு கெட்ட பெயரை உருவாக்க வேண்டும் என்கிற சில சாதியவாத மதவாத கும்பல்கள் திட்டமிட்டு இவ்வாறு செய்கிறார்களோ என்ற ஐயம் எழுகிறது. தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்கப்படாது என ஏற்கனவே அரசு முடிவு எடுத்துள்ளது. அதே நிலைப்பாட்டில் இந்த புதிய அரசும் இருக்கும் என நான் நம்புகிறேன். நேரடியாக இந்தியை திணிக்கிற நடைமுறை நவோதயா பள்ளிகளின் இருப்பதால்தான் அந்த பள்ளிகளை நாம் தொடங்கவில்லை.
தவெக தலைமையில் கூட்டணி
ஆகவே, இப்பொழுது ஆட்சிப் பொறுப்பில் இருக்கிற தமிழக வெற்றிக்கழக அரசும் அதே நிலைப்பாட்டில் இருக்கும் என நான் நம்புகிறேன். நாங்கள் தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் பங்கு பெற்றுள்ளோம் கூட்டணிக்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். விரைவில் தவெக தலைமையில் ஒரு கூட்டணி அமையும் அப்பொழுது அனைவருக்கும் தெரியும்.
காவிரி நீர் பிரச்சனை
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காவிரி நீர் பிரச்சனை தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். டெல்டா விவசாயிகளின் கோரிக்கையை அந்த கூட்டத்தில் தெளிவாக விவாதிக்க வேண்டும். மேகதாது அணை கட்டுவதை கட்டுவதற்கு கர்நாடக அரசு எடுக்கும் முயற்சியை முறியடிக்க வேண்டும் எனவே அனைத்து கட்சி கூட்டம் கூட்ட வேண்டிய தேவை தற்போது உள்ளது. 14க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனம் செய்யப்படாமல் கிடப்பில் உள்ளது ஏற்கனவே இருந்த அரசு முதலமைச்சரே வேந்தராக இருக்கும் சட்டத்தை நிறைவேற்றி அனுப்பி உள்ளது.
துணைவேந்தர்கள்
அது தொடர்பான வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது ஆளுநருக்கு அதிகாரம் அளிக்கக்கூடிய புதிய நடைமுறை வந்து விடக்கூடாது. அப்படி ஒரு நிலைப்பாட்டை புதிய அரசு ஏற்கக் கூடாது. முதலமைச்சரே வேந்தராக இருக்கும் அந்த நிலைப்பாட்டை தற்போதைய அரசு உறுதியாக இருக்க வேண்டும். புதிய துணைவேந்தர்கள் நியமிக்க வேண்டிய நடைமுறைகளை உடனடியாக பின்பற்ற வேண்டும் என முதலமைச்சருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது." என்றார்.
திமுக கூட்டணி
கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் திமுகவுடன் நட்பு ரீதியில் கூட்டணி தொடர்கிறது என கூறி இருந்தார். இதனால் அவரது பேச்சு மாறி மாறி இருப்பதாக அரசியல் களத்திலும் சமூக வலைதளங்களிலும் விமர்சனம் எழுந்தது. இந்த நிலையில் தற்போது தவெக கூட்டணியில் இருக்கிறோம் விரைவில் கூட்டணி அறிவிப்பு வெளியாகும் என திருமாவளவன் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.














Click it and Unblock the Notifications