பாஜகவோடு நாளை திமுக கைகோர்க்கும் நிலை வரலாம்! புது கதையை கிளப்பிய திருமாவளவன்!
அரியலூர்: பாஜகவோடு நாளை திமுக கைகோர்க்கும் நிலை வரலாம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் பாஜகவை எதிர்க்கிறவரை அவர்கள் நமது எதிர்ப்பு சக்திகள்தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் அங்கனூரில் விசிக தலைவரும் எம்பியுமான திருமாவளவனின் தந்தை தொல்காப்பியனின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

இந்த விழாவில் திருமாவளவன் கலந்து கொண்டு தனது தந்தையின் புகைப்படத்திற்கு அஞ்சலி தெலுத்தினார். இதையடுத்து திருமாவளவன் பேசுகையில், தமிழகத்தில் இரு துருவ அரசியலை நிலைநாட்ட வேண்டும் என்ற முனைப்பு தவெகவுக்கு உள்ளது.
ஆனால் திராவிடக் கட்சிகளை ஒரே நேரத்தில் பலவீனப்படுத்த வேண்டும். அதிமுகவை முற்றாக அழித்து ஒழிக்க வேண்டும் என பாஜக, ஆர்எஸ்எஸ் செயல்பட்டு வருகிறது. அதிமுகவை குறி வைத்துதான் அண்ணாமலையும் காய் நகர்த்தினார்.
அதனால்தான் அவர் மேற்கு மாவட்டங்களை குறிவைத்து மாநாடு பொதுக் கூட்டங்களை நடத்துகிறார். எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் ஆதரவாக இருக்கக் கூடிய சமூகத்தின் வாக்கு வங்கியை சமூக பின்னணியோடு தம் பக்கம் ஈர்்துவிட்டால் அதிமுகவை மேலும் பலவீனப்படுத்தி செயலிழக்க முடியும் என சங்பரிவார்கள் கணக்கு போட்டுதான் அண்ணாமலையை பின்னிருந்து இயக்குவதாக நான் கருதுகிறேன்.
முதலில் அதிமுகவை குறிவைத்து பலவீனப்படுத்துவது, பின்னர் திமுகவை தனிமைப்படுத்தி பலவீனப்படுத்துவது என்கிற சங்பரிவார்களின் சூது அரசியல், சூழ்ச்சி நிறைந்த அரசியல் அரங்கேறிக் கொண்டிருப்பதாக நான் கருதுகிறேன்.
இந்த சூழ்ச்சி அரசியலில் தவெகவும் இணைந்துள்ளதா என்பது குறித்து தவெகவிடம் தான் கேட்க வேண்டும். தவெக கூட்டணியில் பாமக இணைகிறதா என்ற யூக கேள்விகளுக்கு நான் பதிலளிக்க முடியாது.
சேலம் அருகே ஒதியத்தில் நிறுவப்பட்ட அம்பேத்கரின் சிலை ஆட்சியரின் அனுமதி பெற்றே வைக்கப்பட்டது. ஆனால் அதை மூடுவதற்கு ஏற்ப ஒரு கலவர சூழலை ஏற்படுத்தியதற்கு காவல்துறைக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வருகிறது. இந்த சம்பவத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்.
தமிழகத்தின் உரிமைகளை பாதுகாப்பதில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசும் உறுதியாக இருக்கிறது என்பதை நம்புகிறோம். தவெக அமைச்சரவையில் இந்திய கம்யூனிஸ்ட் இணைந்தால் அதை விசிக வரவேற்கும்.
நாகர்கோவிலில் நடந்துள்ள சபரிவர்மனின் உயிரிழப்பு பெரும் துயரமானது. உடல் கூராய்வு அறிக்கையில் அவரது உடம்பில் காயங்கள் இருந்தன என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இது அதிர்ச்சி அளிக்கிறது.
தமிழ்நாட்டில் மாறி மாறி எம்எல்ஏக்கள் விலை பேசப்படுகிறார்கள் அல்லது விலைக்கு வாங்கப்படுகிறார்கள் எனும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது ஜனநாயகத்துக்கு உகந்ததல்ல என்பதை விசிக தொடக்கத்திலிருந்து சுட்டிக்காட்டி வருகிறது. அதே போல் தவவெகவில் இருந்தும் எம்எல்ஏக்கள் விலை கொடுத்து வாங்க முயற்சிப்பதும் ஜனநாயகத்திற்கு விரோதமானது. தொகுதி மறுவரையறையை நாடாளுமன்றத்தில் நிச்சயம் எதிர்ப்போம் என தெரிவித்துள்ளார்.
மேலும் திருமாவளவன் பேசுகையில் பாஜகவோடு நாளை திமுக கைகோர்க்கும் நிலை வரலாம். பாஜகவை எதிர்க்கிறவரை அவர்கள் நமது எதிர்ப்பு சக்திகள்தான் என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.















Click it and Unblock the Notifications