3 எழுத்து வாரிசு நடிகரின் வீழ்ச்சி.. சறுக்கிய பிக் பாஸ்! பி.வாசு மகன் "டிரிக்கர் சக்தி" தவறு இதுதான்
சென்னை: தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் வாரிசு நடிகர்கள் பலரும் உச்ச நட்சத்திரங்களாக வலம் வரும்போது, தமிழ்நாட்டில் வாரிசு நடிகர்களால் ஏன் நிலைத்து நிற்க முடியவில்லை என்பது பெரிய கேள்வியாக உள்ளது. இதற்குக் காரணம் முயற்சியின்மையா அல்லது தவறான கதைத் தேர்வா என்று எண்ணத் தோன்றுகிறது" என்று சினிமா விமர்சகர் திண்டுக்கல் வெங்கடேசன் கருத்து தெரிவித்துள்ளார்.. அத்துடன், டைரக்டர் பி.வாசுவின் மகனும், நடிகருமான சக்தி குறித்து பல்வேறு தகவல்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
Media Circle என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள வெங்கடேசன், "நடிகர் சக்தி சமீபத்தில் வெளியான 'அனலி' என்ற படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.. படம் வெளியானதிலிருந்து அவர் விமர்சனங்களுக்கும், சோஷியல் மீடியாவில் கேலிக்கும் உள்ளாகியுள்ளார்.

ஒரு நடிகராக, தனது உடல் கட்டமைப்பை சீராக பராமரிப்பது மிக அவசியமான ஒன்றாகும். எப்போது வாய்ப்பு வரும் என்பதை யாராலும் கணிக்க முடியாது.. ஆனால், வாய்ப்பு வரும்போது அதற்கேற்ப உடலமைப்பைக் கொண்டிருப்பது ஒரு நடிகரின் கடமை. அந்த பராமரிப்பு இல்லாததால்தான் அவர் இத்தகைய கேலிக்கு ஆளாக நேரிட்டது.
நடிகர் சக்தி மீது விமர்சனம்
சக்தியின் அப்பா பி.வாசு, தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த இயக்குநர்களில் ஒருவர். அத்தகைய ஒரு கலைஞரின் மகனாக இருந்தும், சக்தி தமிழ் சினிமாவில் தனக்கான ஒரு நிலையான இடத்தைப் பிடிக்க முடியாமல் போனது மிகுந்த வருத்தமளிக்கிறது.
தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் வாரிசு நடிகர்கள் பலரும் உச்ச நட்சத்திரங்களாக வலம் வரும்போது, தமிழ்நாட்டில் வாரிசு நடிகர்களால் ஏன் நிலைத்து நிற்க முடியவில்லை என்பது பெரிய கேள்வியாக உள்ளது. இதற்குக் காரணம் முயற்சியின்மையா அல்லது தவறான கதைத் தேர்வா என்று எண்ணத் தோன்றுகிறது.
தொட்டால் பூ மலரும்
சக்தி எம்பிஏ பட்டம் பெற்றவர். நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தால் தன்னுடைய அப்பாவின் இயக்கத்திலேயே "தொட்டால் பூ மலரும்" படம் மூலம் அறிமுகமானார். படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை. அதன் பிறகு, சரியான வாய்ப்புகள் அவருக்கு அமையவில்லை. அதற்கு பிறகு குடிப்பழக்கம் போன்ற சர்ச்சைகளில் சிக்கியது அவரது பிம்பத்தை சிதைத்தது. இதனால் தயாரிப்பாளர்களும் சக்திக்கு வாய்ப்பளிக்க தயக்கம் காட்டினர்.
இதனிடையே "பிக் பாஸ்" நிகழ்ச்சியிலும் சக்தி கலந்துகொண்டார். ஆனால், அங்கேயும் சில குரூப்களுடன் சேர்ந்து சர்ச்சைகளில் சிக்கியதால், அது அவரது பெயருக்கு மேலும் களங்கம் விளைவித்தது. அத்துடன் கமல்ஹாசன் முன்னிலையிலேயே "ட்ரிகர் சக்தி" என்று விமர்சிக்கப்பட்டார். இதனால் அவருக்கு ஒரு நிரந்தரமான நெகட்டிவ் பிம்பத்தை ஏற்படுத்திவிட்டது.
சறுக்கி விட் பிக் பாஸ்
பிக் பாஸ் போன்ற ஒரு பெரிய மேடையைச் சரியாகப் பயன்படுத்தத் தவறியது அவரது வாழ்க்கையில் ஒரு பெரும் இழப்பாகும். 2017-க்குப் பிறகு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. காதல் இளவரசன் என்று பெயர் பெற்ற பிரசாந்த்கூட இப்படித்தான்.. ஹரியின் இயக்கத்தில் நடிக்கவிருந்தபோது, உடல் எடை கூடியதால் அந்த சான்ஸ் கைநழுவியது. பிரசாந்த் மற்றும் சக்தி இருவருமே திறமையானவர்கள்.. ஆனால் உடல் கட்டமைப்பை பேண தவறிவிட்டதே அவர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
அனலி படம் கைதி போன்ற பாணியில் எடுக்க முற்பட்டாலும், அது சரியான முறையில் அமையவில்லை. அந்த வில்லன் கேரக்டருக்கு பொருத்தமான பாடி லேங்குவேஜ், குரல் எதுவுமே சக்தியிடம் இல்லை. சக்தி நல்ல நிறம், உயரம், முக அமைப்பு இயற்கையாகவே பெற்றுள்ளார். இருந்தாலும் கதை தேர்வின்மை, உடல் பராமரிப்பின்மை அவரது வாழ்க்கையையே சிதைத்துவிட்டன.
மீண்டும் வலம் வருவார் சக்தி
இப்படியொரு சூழலில் நடிகர்கள் தங்களை செதுக்கிக்கொள்ள வேண்டும். அருண் விஜய் தனது திரைப்பயணத்தில் தொடர்ச்சியான தோல்விகளைச் சந்தித்தாலும், விடாமுயற்சியுடன் போராடினார். இன்றுவரை சிறந்த நடிகராக நிலைத்து நிற்கிறார். இது போன்ற அக்கறையும், முயற்சியும் சக்திக்கும் அவசியம்.
சக்தி மீண்டும் எழுந்து வர வேண்டுமெனில், அவர் மற்றவர்களை சார்ந்திருக்காமல், இயக்குநர்களிடம் சென்று நல்ல கதைகளை கேட்டுப் பெற்று, அதில் தனது திறமையை நிரூபிக்க வேண்டும். அவர் தன்னை மேம்படுத்திக் கொண்டால், நிச்சயமாக மறுபடியும் ஒரு நல்ல கேரக்டர் மூலம் சினிமாவில் கம்பீரமாக மீண்டு வருவார்." என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.













Click it and Unblock the Notifications