காங்கிரஸ் கட்சியில் சேர மாட்டேன்: ப.சிதம்பரம்
சென்னை:
கட்சியைக் கலைத்துவிட்டு காங்கிரஸ் கட்சியில் சேரப் போவதாக வரும் செய்திகளை காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையின் தலைவர் ப.சிதம்பரம் மறுத்துள்ளார். அது வெறும் வதந்தி என அவர் கூறியுள்ளார்.
தற்போது அமெரிக்காவில் உள்ள சிதம்பரம் அங்கிருந்து வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
தமிழகத்தில் மூன்றாவது அணியை அமைக்கும் நோகத்தில் நான் இருக்கிறேன். காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை திமுக, அதிமுகவுக்கு மாற்றாக ஒரு கூட்டணியை உருவாக்க முயன்று கொண்டுள்ளது.
இந்த முயற்சிகளில் காங்கிரசும் தன்னை இணைத்துக் கொண்டால் மகிழ்வேன். மற்றபடி நான் காங்கிரஸ் கட்சியில் சேரப் போவதாக வரும் செய்திகள் தவறானவை. ராஜிவ் காந்தி அறக்கட்டளையின் தலைவராக உள்ள சோனியா காந்தியை அந்த அறக்கட்டளையின் நிர்வாகிகளில் ஒருவன் என்ற வகையில் சந்தித்தேன் அவ்வளவு தான்.
இந்தச் சந்திப்புக்கு அரசியல் முக்கியத்துவம் ஏதும் இல்லை. மேலும் நாங்கள் என்ன பேசினோம் என்பது குறித்து பத்திரிகைகளுக்கு செய்தி தரும் அளவுக்கு அதில் எந்த முக்கியத்துவமும் இல்லை என்று கூறியுள்ளார் சிதம்பரம்.
வரும் ஜூன் 15ம் தேதி சென்னையில் நடக்கும் காமராஜர் நூற்றாண்டு விழாவில் சோனியா காந்தி முன்னிலையில் ப.சிதம்பரம் காங்கிரஸ் கட்சியில் சேருவார் என்று கூறப்பட்டது. இந்தச் செய்திகள் காங்கிரஸ் தரப்பில் இருந்து தான் பரப்பப்பட்டன.