கேரள லாரி ஸ்டிரைக்: தமிழகத்திற்கு பெரும் நஷ்டம்
கோவை:
கேரளாவில் லாரிகள் வேலை நிறுத்தம் நடந்து வருவதால் தமிழகத்தில் காய்கறிகள் தேங்கிக் கிடக்கின்றன. இதனால் தமிழக உற்பத்தியாளர்களுக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
கேரளத்துக்கு அரிசியில் ஆரம்பித்து காய்கறிகள் வரை தமிழகத்தில் இருந்து தான் செல்கின்றன. கேரள லாரிகள் தினமும் ஆயிரக்கணக்கில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் வந்து இவற்றை ஏற்றிச் செல்கின்றன.
இவை தவிர தமிழக லாரிகளும் ஆயிரக்கணக்கில் இந்த சப்ளையில் ஈடுபட்டுள்ளன. குறிப்பாக மதுரை, தேனி, கொடைக்கானல், கோவை, ஊட்டி, கன்னியாகுமரி, நாகர்கோவில், தூத்துக்குடி, விருதுநகர், நாமக்கல் நகரங்கள், மாவட்டங்களில் இருந்து அரிசி, பருப்பு, காய்கறிகள் கேரளத்துக்குச் செல்கின்றன.
கேரளாவில் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் லாரிகள் தமிழக எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக பல கோடி மதிப்புள்ள பொருட்கள் தேக்கமடைந்துள்ளன.
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 4,000 லாரிகள் கேரளாவுக்குள் நுழைய முடியாமல் வாலையாறு சோதனைச் சாவடியுடன் நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால் காய்கறிகள், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் லாரிகளில் தேங்கிக் கிடக்கின்றன. இதனால் ஒரு நாளைக்கு ரூ. 2 கோடி அளவுக்கு தமிழக வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்படுவதாக கோவை மாவட்ட லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல, நாமக்கல் நகரிலிருந்து கேரளாவுக்குச் செல்ல வேண்டிய ரூ. 2 கோடி முட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன. இந்த முட்டைகள் அனைத்தும் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல, கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கேரளாவுக்குச் செல்ல வேண்டிய பூக்கள், மலைக் காய்கறிகள் உள்ளிட்டவை தேங்கிக் கிடக்கின்றன. களியக்காவிளை பகுதியில் லாரிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. நாகர்கோவிலிலும் ஏராளமான லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
-->