கர்நாடகம் மீண்டும் முரண்டு: வெட்டியாய் முடிந்தது காவிரி கண்காணிப்புக் குழுக் கூட்டம்
டெல்லி:
டெல்லியில் நடந்த காவிரிக் கண்காணிப்புக் கூட்டம் எந்த முடிவும் எடுக்கப்படாமல் முடிவடைந்தது. இதையடுத்துஇக் கூட்டம் மீண்டும் வரும் 25ம் தேதிக்குக் கூட்டப்பட்டுள்ளது.
வறட்சி காலத்தில் காவிரி நீரைப் பகிர்ந்து கொள்வது குறித்து மத்திய நிபுணர் குழு உருவாக்கியுள்ள புதியவரைமுறைகள் குறித்து விவாதிக்க காவிரிக் கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடந்தது.
இதில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ், பொதுப் பணித்துறைச் செயலாளர் பழனியப்பன்,காவிரி நதி நீர் நிபுணர் மோகன கிருஷ்ணன், கர்நாடக தலைமைச் செயலாளர் பாட்டீல், பாண்டிச்சேரி தலைமைச்செயலாளர் பத்மநாபன் மற்றும் கேரள பாசனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். மத்திய நீர்வளத்துறைச்செயலாளர் கோஸ்வாமி தலைமையில் இக் கூட்டம் நடந்தது.
இதில் காலம் காலமாக இருந்து வரும் பிரச்சனை மீண்டும் வெடித்தது. கர்நாடகத்தில் இருந்து திறந்துவிடப் படும்நீரை எங்கு அளவிடுவது என்பதில் தமிழகத்துக்கும் கர்நாடகத்துககும் இடையே மோதல் ஏற்பட்டது.
தமிழகத்துக்கு வந்து சேரும் நீரை மேட்டூர் அணையில் தான் அளவிட வேண்டும் எனதமிழகம் கூறியது. ஆனால்,அதை கர்நாடகத்தில் உள்ள பிலிகுண்டு அணையில் அளவிட வேண்டும் என கர்நாடகம் கூறியது.
பிலிகுண்டு அணை கர்நாடகத்துக்குள் உள்ளது. இதனால், இந்த அணைக்கு வந்து சேரும் நீர் எப்படி தமிழகத்துக்குவந்ததாக எடுத்துக் கொள்ள முடியும் என தமிழகம் கேட்டது. ஆனால், இது தமிழக எல்லைக்கு அருகில்உள்ளதாகவும் இதனால் அதில் தான் நீரை அளவிட வேண்டும் எனவும் கர்நாடகம் கூறியது.
ஆனால், எங்கள் மாநிலத்துக்குள் நீர் வந்த பிறகு தான் அதை அளவிட முடியும், பிலிகுண்டுவில் இருந்துமேட்டூருக்கு வருவதற்குள் பூமி குடித்தது போக பாதி நீர் கூட எங்களுக்குக் கிடைக்காது என தமிழக தலைமைச்செயலாளர் லட்சுமி பிரானேஷ் கூறினார்.
கடந்த ஆண்டு 110 டி.எம்.சி. நீரை விட்டதாக கர்நாடகம் கூறியது. ஆனால், மேட்டூருக்கு வந்து சேர்ந்தது இதில்முக்கால்வாசி மட்டும் தான். ஆனாலும், தமிழகத்துக்கு 110 டி.எம்.சி. விட்டுவிட்டதாக கர்நாடகம் கூறியதை லட்சுமிசுட்டிக் காட்டினார்.
இது தவிர வரும் சம்பா சாகுபடிக்கு தமிழகத்துக்கு உடனடியாக தண்ணீர் தேவைப்படுவதால், கர்நாடக அணைக்கட்டுகளில் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரை உடனே தமிழகத்துக்குத் திறந்துவிடவும் அவர் வலியுறுத்தினார்.
ஆனால், அதை கர்நாடகம் ஏற்கவில்லை. இதனால் இக் கூட்டம் எந்த முடிவும் எட்டப்படாமல் முடிவடைந்தது.
இதையடுத்து வரும் 25ம் தேதி மீண்டும் கண்காணிப்புக் குழுவின் கூட்டம் நடத்தப்படும் என மத்திய அரசுஅறிவித்துள்ளது.