திறமையில்லா அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு "கட்"!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அரசு ஊழியர்களின் திறமையை மட்டும் அடிப்படையாக வைத்து சம்பள உயர்வும், பதவி உயர்வும் அளிக்கலாம்என்று முதல்வர்ஜெயலலிதாவுக்கு, நிதியமைச்சர் பொன்னையன் தலைமையிலான நிர்வாக சீரமைப்புக் குழுபரிந்துரை செய்துள்ளது.
மேலும் வாரத்துக்கு 6 நாள் வேலையை அமலாக்கவும் பரிந்துரைத்துள்ளது.
அரசு நிர்வாகத்தை சீரமைப்பது தொடர்பாக பொன்னையன் தலைமையில் ஒரு குழுவை முதல்வர் ஜெயலலிதாநியமித்தார். அரசு நிர்வாகத்தில் செய்ய வேண்டிய மாற்றங்கள், அரசு ஊழியர்கள் தொடர்பான முக்கியதிருத்தங்களை இந்தக் குழு முதல்வருக்குப் பரிந்துரைத்துள்ளது.
இந்தப் பரிந்துரைகள் அனைத்துமே, அரசு ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுக்கும் வகையில்அமைந்துள்ளன. முதல்வரிடம் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகள் விவரம்:
- தற்போது மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படுகிறது. அந்த முறையை ரத்து செய்து விட வேண்டும். அதற்குப் பதிலாக திறமை உள்ள ஊழியர்களுக்கு மட்டும் பதவி உயர்வு கொடுக்கலாம். மற்றவர்கள் தொடர்ந்து அதே பதவியில் நீடிக்க வேண்டியதுதான்.
- அதேபோல, அலுவலக உதவியாளர்கள் முதல் இணைச் செயலாளர்கள் வரை, திறமை அடிப்படையிலேயே சம்பள உயர்வு அளிக்கப்பட வேண்டும். நன்கு வேலை பார்த்தால் சம்பள உயர்வுடன் ஊக்கப் பரிசும் அளிக்கலாம். மற்றவர்களுக்கு ஊதிய உயர்வு தர வேண்டியதே இல்லை.
- திறம்பட பணி செய்யாத ஊழியர்களை, முக்கியத்துவம் இல்லாத இடங்களுக்கு மாற்றிவிடலாம். அவர்களுக்கு சம்பள உயர்வோ, பதவி உயர்வோ தர வேண்டிய அவசியமே இல்லை.
- அரசு ஊழியர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. ஆனால் அவுட்-புட், அதாவது பலன்கள் மிகவும் அதிர்ச்சி தரும் வகையில்தான் மிகக் குறைவாகவே உள்ளன. எனவே மிகுதியாக உள்ள ஊழியர்களை, தேவைப்படும் பிற துறைகளுக்கும், இடங்களுக்கும் மாற்றி விடலாம்.
- வாரத்திற்கு 6 நாள் வேலைத் திட்டம் மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும். சனிக்கிழமையும் அரசு அலுவலகங்கள் இயக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் சாதாரண விடுப்புகளின் (சி.எல்.) எண்ணிக்கையை கொஞ்சம் அதிகரிக்கலாம்.
- அரசுத் துறைகளில் சில பணிகளில் தனியாரை ஈடுபடுத்தலாம். இதனால் அரசின் செலவுகள் கணிசமாகக் குறையும். அதாவது, அரசு வாகனங்களின் பராமரிப்பு மிகவும் மோசமாக இருப்பதால், அவற்றின் ஓட்டம் மிகுந்த நஷ்டத்தையே கொடுக்கிறது. எனவே இதுபோன்றவற்றில் தனியார் வாகனங்களை ஒப்பந்த அடிப்படையில் பயன்படுத்தலாம். இதன் மூலம் டிரைவர்களை பணிக்கு நியமித்து ஊதியம், படிகள் வழங்குவதைத் தவிர்க்கலாம்.
- அரசுச் செயலாளர்களுக்கு அரசு சார்பில் சொந்தக் கார் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் அலுவலகத்திற்கு அவர்கள் வந்து செல்லலாம், ஆனால், சொந்தப் பணி காரணமாக வெளியே செல்ல நேர்ந்தால், வாடகைக் கார்களை அமர்த்திக் கொள்ளுமாறு அறிவுறுத்த வேண்டும்.
- ஓய்வு பெறும் வயதை 58ல் இருந்து 56 ஆக குறைப்பதற்கான யோசனையை அரசு கைவிட்டு விட்டதால் அது குறித்து ஏதும் பரிந்துரை இல்லை.












Click it and Unblock the Notifications