ரேசன் கடைகள் தனியார்மயம்: தமிழக அரசு திட்டம்?
சென்னை:
ரேசன் கடைகளை தனியார்வசம் ஒப்படைக்கலாம் என தமிழக அரசுக்கு சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரை செய்துள்ளதாகத் தெரிகிறது.
அரசின் செலவுகளைக் குறைப்பது குறித்து யோசனைகள் சொல்ல முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியான சுவாமிநாதன் தலைமையில் இந்த ஒரு நபர் கமிட்டி அமைக்கப்பட்டது.
இந்தக் கமிட்டி சமீபத்தில் தனது அறிக்கையை முதல்வர் ஜெயலலிதாவிடம் அளித்தது. அதில், அரசு ஊழியர்களாக டிரைவர்கள், துப்புறத் தொழிலாளர்கள், வாட்ச்மேன்களைச் சேர்ப்பதை நிறுத்துமாறும் அதற்குப் பதிலாக இந்தப் பணிகளை தனியாரிடம் காண்ட்ராக்ட் அடிப்படையில் ஒப்படைக்கலாம் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும் அரசு ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்கவும், விருப்ப ஓய்வைக் கொண்டு வரவும் பரிந்துரை செய்துள்ளதாகத் தெரிகிறது.
இந் நிலையில் ரேசன் கடைகளையும் தனியார்வசம் ஒப்படைத்துவிட்டால் அதை நடத்தும் செலவும் அரசுக்குக் குறையும் என இந்தக் கமிஷன் கூறியுள்ளதாகத் தெரிகிறது.
சமீபத்தில் தான் ரூ. 5,000க்கு மேல் மாத வருமானம் உள்ளவர்களுக்கு ரேசன் பொருள்கள் கிடையாது என்று அறிவிக்கப்பட்டது. விரைவில் ரேசன் கடைகளும் தனியார் கடைகளாகிவிடும் என்று தெரிகிறது.