மணல் அள்ள தடை: அரசு உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு
சென்னை:
ஆற்றுப் படுகைகளில் மணல் எடுத்து விற்பனை செய்ய தனியாருக்கு தரப்பட்ட குத்தகையை அரசு ரத்து செய்ததைஎதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம் வெடிச்சிப்பாளையம் என்ற ஊரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் இந்த வழக்கைத்தொடர்ந்துள்ளார். இவர் தாக்கல் செய்துள்ள மனுவில்,
2002ம் ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி முதல் 2005ம் ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி வரை எனது சொந்த பட்டா நிலத்தில் மண்வெட்டிக் கொள்ள அரசு அனுமதி கொடுத்தது. தற்போது திடீரென்று அந்த குத்தகை ரத்து செய்யப்பட்டுவிட்டது.
தமிழ்நாடு கணிமம் வெட்டியெடுக்கும் சட்டத்தின் 4(3)வது பிரிவின்படி முன்னறிவிப்பின்றி குத்தகையை ரத்துசெய்வது சட்டவிரோதமாகும். மேலும் மத்திய அரசின் அனுமதியில்லாமல் மாநிலத்தின் எந்தப் பகுதியையும் மண்எடுக்க மாநில அரசு பயன்படுத்த முடியாது.
குத்தகை நிபந்தனைகளை மீறுவோர் மீது மட்டுமே மாநில அரசு நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால்ஒட்டுமொத்தமாக அனைவரின் குத்தகைகளையும் ரத்து செய்தது சட்டவிரோதமான முடிவாகும்.
எனவே மணல் குத்தகையை அரசு ரத்து செய்தது செல்லாது என்று அறிவித்து அரசு உத்தரவுக்குத் தடை விதிக்கவேண்டும் என்று கோரியுள்ளார்.