மரத்தடிக்கு மாறிய அரசு ஊழியர் சங்கம்
சென்னை:
சென்னை தலைமைச் செயலக ஊழியர் சங்கம் இப்போது மரத்தடியில் செயல்பட்டு வருகிறது !!!
வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது தமிழக அரசு கடும்நடவடிக்கை எடுத்தது. டிஸ்மிஸ் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 6,072 பேர் இன்னும் வேலையில் சேரமுடியாமல் தவித்து வருகிறார்கள்.
ஊழியர் சங்கங்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த அங்கீகாரத்தையும் தமிழக அரசு ரத்து செய்தது. மேலும், தலைமைச்செயலக வளாகத்தில் ஊழியர் சங்கங்களுக்குத் தரப்பட்ட அலுவலகங்களைக் காலி செய்ய அரசு உத்தரவிட்டது.
காலி செய்ய மறுத்த சங்க அலுவலகங்களை அரசே பூட்டி சீல் வைத்துவிட்டது. இதனால் தலைமைச் செயலகவளாகத்துக்குள் அமர்ந்து செயல்பட இடமின்றி தவித்து வருகின்றன அரசு ஊழியர்கள் சங்கங்களின் நிர்வாகிகள்.
இந் நிலையில் தலைமைச் செயலக ஊழியர் சங்கம் இப்போது தலைமைச் செயலக தபால் நிலையம் அருகே உள்ளமரத்தடியில் செயல்பட ஆரம்பித்துள்ளது. ஊழியர் சங்கத் தலைவர் பாண்டுரங்கன் மற்றும் பிற நிர்வாகிகள் தினசரிஇங்கு வந்து வழக்கு விவகாரங்கள் குறித்து விவாதித்துவிட்டுக் கலைகிறார்கள்.
கையோடு சேர்களையும் எடுத்துக் கொண்டு வரும் அவர்கள், கூட்டம் முடிந்த பின் அவற்றைத் திரும்பவும் தூக்கிக்கொண்டு செல்கின்றனர்.
இதை சில நாட்களாக உளவுப் பிரிவு போலீசாரும் கண்காணித்து வருகின்றனர். விரைவில் இந்த மரத்தடிஜமாவுக்கும் தடை விழ வாய்ப்புள்ளது.