மின் இணைப்பு துண்டிப்பை எதிர்த்து விவசாயிகள் வழக்கு
சென்னை:
மின் இணைப்பை துண்டிக்கும் அரசின் நடவடிக்கைக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில்வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
மின்கட்டணம் செலுத்தாத விவசாயிகளின் மின் இணைப்பை துண்டிக்கும் அரசின் நடவடிக்கைக்கு தடை விதிக்கக்கோரி தமிழக விவசாயிகள் சங்கத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
தமிழக அரசு கடந்த 1989ம் ஆண்டு முதல் விவசாயிகளுக்கு வழங்கி வந்த இலவச மின்சாரத்தை ஜெயலலிதா அரசுரத்து செய்து விட்டது. இதைத் தொடர்ந்து மின்சாரத்திற்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.
அதன்படி, மோட்டார் பம்பு செட்டுகள் வைத்திருக்கும் விவசாயிகள், ஒரு குதிரை சக்திக்கு ஆண்டுக்கு ரூ. 250செலுத்த வேண்டும். அல்லது, மீட்டர் பொருத்த ஒப்புக் கொண்டால், யூனிட்டுக்கு 20 பைசா மின் கட்டணமாகசெலுத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது.
இதை பெரும்பாலான விவசாயிகள் ஏற்க மறுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சில விவசாயிகள் அரசின்திட்டத்தை ஏற்றுக் கொண்டு கட்டணம் செலுத்த சம்மதித்துள்ளனர்.
இருப்பினும் இவர்கள் இன்னும் கட்டணத்தை செலுத்தாத காரணத்தால், இன்றைக்குள் (அக்டோபர் 15ம் தேதி)கட்டணத்தை செலுத்தாவிட்டால் மின் இணைப்புகள் துண்டிக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது.
இதைக் கண்டித்து தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் வி.சி.ரத்தினசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்துள்ளார். தனது மனுவில், மாநிலம் முழுவதிலும் வறட்சி நிலவுகிறது.
விவசாயிகள் கடும் வறுமையில் வாடி வருகின்றனர். பலர் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குச் சென்றுவிட்டனர். நிலங்கள்,கால்நடைகளை விற்று அவர்கள் ஜீவனம் செய்ய வேண்டிய நிலையில் உள்ளது.
பருவ மழை பொய்த்து விட்டதால், சாகுபடி செய்ய டியாமல், கையில் பணம் இல்லாமல் மின்சாரக் கட்டணத்தைசெலுத்த இயலாத நிலையில் விவசாயிகள் உள்ளனர்.
ஆனால் விவசாயிகள் மின் கட்டணத்தை செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று அரசுஅறிவித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அரசின் இந்த நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று மனுவில்கோரப்பட்டிருந்தது.
இதேபோன்ற ஒரு மனுவை தமிழக விவசாய மின்சார உபயோகிப்பாளர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர்லட்சுமணன் என்பவரும் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுக்கள் மீதான விசாரணையை அக்டோபர் 30ம் தேதிக்கு தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதிகுலசேகரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தள்ளி வைத்தது.
மேலும் இதுதொடர்பாக பதில் அளிக்குமாறு கூறி அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.