மாணவனை கிரிக்கெட் ஸ்டம்பால் அடித்து கொலை செய்த வாலிபர்
சேலம்:
கிரிக்கெட் விளையாட்டில் சேர்க்க மறுத்த மாணவனை வாலிபர் பேட் மற்றும் ஸ்டெம்பால் அடித்துக் கொலை செய்தார்.
சேலம் பேர்லாண்ட்ஸ் மிட்டாபுதூரைச் சேரந்த கட்டடத் தொழிலாளி கோபால். இவரது ஒரே மகன் கோபி(16) இங்குள்ள ராமகிருஷ்ணா சாரதா மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்துவருகிறார்.
கோபியும், அவரது நண்பர்களும் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்தனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சரவணன்(25) அங்கு வந்து தன்னையும் விளையாட்டில் சேர்த்துக் கொள்ளச் சொல்லியிருக்கிறார்.
அதற்கு கோபியும். அவரது நண்பர்களும் மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சரவணன் அங்கிருந்த கிரிக்கெட் மட்டையை எடுத்து கோபியின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் கோபியின் தலையில் ரத்தம் கொட்டியது. பின்னரும் ஆத்திரம் தணியாத சரவணன் ஸ்டெம்பை எடுத்து கோபியின் வயிற்றில் குத்தியுள்ளார். ரத்தவெள்ளத்தில் கோபி கீழே விழந்தார்.
இதனையடுத்து நண்பர்கள் போட்ட கூச்சலால் பொதுமக்கள் வரவே, சரவணன் அங்கிருந்து தப்பி பெரம்நாதர் கோவிலுக்குள் ஓடினார். பின்னர் தகவலறிந்து போலீஸார் விரைந்து வந்தனர். அவர்கள் கைது செய்ய முயன்றபோது, சரவணன் கோயில் முன்பிருந்த ஈட்டியைப் பிடுங்கி போலீஸாரைக் குத்திவிடுவதாக மிரட்டியுள்ளார்.
சிறிது நேரத்தில் ஈட்டியைக் கீழே போட்டுவிட்டு, கோயில் கிணறு பக்கம் பதுங்கியிருக்கிறார். அதன்பிறகு போலீஸார் அவரை மடக்கிப் பிடித்துள்ளனர். காவல் நிலையத்தில் பைத்தியக்காரன் போல் சரவணன் நடந்து கொண்டுள்ளார். கடந்த 5 மாதங்களாக மனநிலை பாதிக்கப்பட்டு சென்னை மருத்துவமனையில் சரவணன் சிகிச்சை பெற்றாராம்.
இவருக்கு மகேஷ் என்ற மனைவியும், இரு மகள்களும் உள்ளனர். கொலைக் குற்றத்திலிருந்து தப்பிப்பதற்காவே பைத்தியம் போல் நடிப்பதாக வந்த புகாரையடுத்து சரவணனை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்ப போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
இந் நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கோபி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். இது குறித்து அழகாபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications