ஏரிகளை சுற்றி மரம் நட ஜெ. உத்தரவு
சென்னை:
சென்னை நகருக்குக் குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், செங்குன்றம் ஏரிகளைச் சுற்றிலும் உள்ள நீர்ப்பிடிப்புப்பகுதிகளில் மரம் நடும் திட்டத்தை உடனடியாக மேற்கொள்ளுமாறு சென்னை பெருநகர குடிநீர் விநியோகம்மற்றும் கழிவு நீர் அகற்றும் வாரியத்திற்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வட கிழக்குப் பருவமழை மற்றும் தென்மேற்கு பருவ மழையின்போது பூண்டி, சோழவரம், செங்குன்றம் ஏரிகளுக்கு போதுமான நீர் கிடைக்கவில்லை.இதனால் இங்கு நீர் இருப்பு வெகு குறைவாக உள்ளது.
மேலும், இந்த ஆண்டு இதுவரை கிருஷ்ணா நீரும் சென்னைக்கு வந்து சேரவில்லை. தற்போது பெய்து வரும் வடகிழக்குப் பருவ மழையும் போதுமானதாக இல்லை. இதனால் பூண்டி, சோழவரம், செங்குன்றம் ஏரிகளைச் சுற்றிலும்உள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மரக் கன்றுகளை நட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
மூன்று ஏரிகளைச் சுற்றிலும் உள்ள 2057 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் 15,000 மரக்கன்றுகள் நடப்படவுள்ளன. இந்தப் பணி சனிக்கிழமை முதல் தொடங்கியுள்ளது. ஒரு வார காலத்திற்கு மரக்கன்றுகள் நடும் பணி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது சென்னை நகருக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளில் மொத்தமாக 7.4 டிஎம்சி தண்ணீர் மட்டுமே உள்ளது.ஏரிகளின் மொத்தக் கொள்ளளவில் நான்கில் ஒரு பங்குதான் இது என்பது குறிப்பிடத்தக்கது.