பிரபாகரனை சந்தித்த ஐரோப்பிய யூனியன் தூதர் இந்தியா வருகை
சென்னை:
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு அமைதித் தீர்வு காண்பதில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உறுதியாக இருப்பதாக ஐரோப்பிய யூனியனின் வெளியுறவுத்துறை ஆணையர் கிறிஸ் பேட்டன் கூறினார்.
இலங்கையில் அதிபர் சந்திரிகாவையும், நேற்று வவுனியாத் தீவுக்குச் சென்று பிரபாகரனையும் சந்தித்துப் பேச்சு நடத்திய பேட்டன் இந்தியா வந்துள்ளார். இன்று சென்னையில் ஆளுநர் ராம்மோகன் ராவை அவர் சந்தித்துப் பேசினார்.
முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அமைதி முயற்சிகளுக்கு பிரபாகரன் துணை நிற்க வேண்டும் என்ற சர்வதேச சமுதாயத்தின் எதிர்பார்ப்பை அவரிடம் விளக்கினேன். இனப் பிரச்சனைக்கு அமைதியான வழியில் தீர்வு காண்பதில் பிரபாகரனும் பிற இலங்கைத் தலைவர்களும் உறுதியாக உள்ளனர்.
நிச்சயம் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு அமைதித் தீர்வு ஏற்படும்.
விடுதலைப் புலிகள் தனி நாடு கோரிக்கையை நிரந்தரமாகக் கைவிட வேண்டும், அதை வலியுறுத்தவே கூடாது. வன்முறைப் பாதைக்குத் திரும்பவே கூடாது என்று பிரபாகனை கேட்டுக் கொண்டேன் என்றார்.
பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தில் அமைதித் தீர்வுகள் குறித்து உரையாற்றிய பேட்டன், இலங்கை அமைதிப் பேச்சுவார்த்தைகளில் முஸ்லீம்களையும் பங்கெடுக்கச் செய்வது அவசியம். இலங்கையின் எதிர்கால, நிரந்தர அமைதிக்கு இது மிக முக்கியம்.
தீவிரவாத பாதைக்கு புலிகள் மீண்டும் சென்றால் அது சர்வதேச அளவில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்திவிடும் என்பதை பிரபாகரனிடம் நான் தெரிவித்தேன் என்றார்.