தமிழக அய்யப்ப பக்தர்களுக்கு கேரள டிஜிபி வேண்டுகோள்
சென்னை:
சபரிமலைக்கு வரும் தமிழக ஐயப்ப பக்தர்கள் தங்களது பஸ்கள், மினி பஸ்கள் போன்ற வாகனங்களை நிலக்கல் என்ற இடத்தில் மட்டுமே நிறுத்த வேண்டும் என்று கேரள மாநில காவல்துறைத் தலைவர் ஹோர்மீஸ் தரகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை மூலமாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
சபமலைக்கு வரும் பக்தர்கள் பம்பா வரை தங்களது பஸ்களில் வரலாம். பம்பா காவல் நிலையம் வந்ததும் அவர்கள் இறங்கிக் கொண்டு வாகனங்களை நிலக்கல்லுக்கு அனுப்பி விட வேண்டும்.
தரிசனம் முடிந்து திரும்புகையில், பம்பாவிலிருந்து நிலக்கல் வரை கேரள அரசுப் போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு செய்துள்ள வாகனங்களில் சென்று பின்னர் தங்களது வாகனங்களில் பயணிக்கலாம்.
எந்தக் காரணம் கொண்டும், நிலக்கல்லில் இருந்து பம்பாவுக்கு பஸ்கள் செல்ல அனுமதிக்கப்படாது. மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
வேன், கார், ஜீப் போன்ற வாகனங்களில் வருவோர் அவற்றை பம்பா, திரிவேணி, ஹில்டாப், செக்குப்பாலம் ஆகிய இடங்களில் நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.