ஜெ. வழக்கு: பெங்களூரில் நடத்த கர்நாடகம் விரும்பவில்லை
பெங்களூர்:
ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்குகளை பெங்களூரில் இருந்து வேறு இடத்துக்கு மாற்றுமாறு கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், தினகரன், இளவரசி ஆகியோர் மீதான் சொத்துக் குவிப்பு வழக்கு தமிழகத்தில் கேலிக் கூத்தாக நடத்தப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரி திமுக வழக்குத் தொடர்ந்தது.
இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழக அரசுக்கும் அரசு வழக்கறிஞருக்கும் கடும் கண்டனம் தெரிவித்ததோடு வழக்கை கர்நாடக மாநிலத்துக்கு மாற்ற உத்தரவிட்டது.
விசாரணையை ஆரம்பத்தில் இருந்தே நடத்தும் விதத்தில் பெங்களூரில் ஒரு தனி நீதிமன்றம் அமைக்கவும், தனி நீதிபதி, அரசு வழக்கறிஞர் ஆகியோரை நியமிக்கவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து ஜெயலலிதா வந்து செல்வதற்கு வசதியாக பெங்களூர் விமான நிலையத்தின் அருகிலேயே இந்த நீதிமன்றம் அமைக்கப்படலாம் என்று கூறப்பட்டது.
தனி நீதிமன்றம் அமைக்கக் கோரும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு நகல் நேற்று முன் தினம் (வெள்ளிக்கிழமை) தான் கர்நாடக அரசுக்கு வந்து சேர்ந்தது. இந்த உத்தரவு கிடைத்த 6 வாரத்துக்குள் தனி நீதிமன்றத்தை கர்நாடகம் அமைத்தாக வேண்டும்.
இது குறித்து கர்நாடக அரசின் அட்வகேட் ஜெனரல் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் கிருஷ்ணா ஆலோசனை நடத்தினார்.
காவிரி விஷயத்திலும், வீரப்பன் விவகாரத்திலும் இரு மாநிலங்களுக்கும் இடையிலான உறவு மிக சிக்கலானதாக இருந்து வருவதால் ஜெயலலிதாவின் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றுமாறு கோர கிருஷ்ணா முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வருகின்றன.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யுமாறு அட்வகேட் ஜெனரல் எ.என். ஜெயராமுக்கு முதல்வர் கிருஷ்ணா உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில் பெங்களூருக்கு வெளியே மங்களூர், குல்பர்கா போன்ற காவிரி விவகாரத்தில் தொடர்பில்லாத கர்நாடகத்தின் வட மாவட்டங்களில் ஏதாவது ஒன்றில் வேண்டுமானால் நீதிமன்றத்தை அமைக்கிறோம் என்று அந்த மனுவில் கர்நாடக அரசு தெரிவிக்கலாம் என்று கூறப்படுகிறது.