அரசு ஊழியர் விசாரணை: 12ம் தேதி இறுதி அறிக்கை தாக்கல்?
சென்னை:
டிஸ்மிஸ் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அரசு ஊழியர்களிடம் 3 நீதிபதிகள் நடத்திய விசாரணை குறித்த இறுதி அறிக்கை வரும் 12ம் தேதி அரசிடம் தாக்கல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால், டிஸ்மிஸ் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அரசு ஊழியர்களின் வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 3 நீதிபதிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழுவினர் நடத்திய விசாரணையின் அடிப்படையில், தலைமைச் செயலகம் மற்றும் சென்னை மாவட்ட அரசு ஊழியர்கள் மீதான விசாரணை அறிக்கை கடந்த மாதம் அரசிடம் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 587 அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்கள். மற்றவர்களுக்கு ஊதிய உயர்வு ரத்து உள்ளிட்ட தண்டனையுடன் மீண்டும் பணி வழங்கப்பட்டது.
இந் நிலையில் மற்ற மாவட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான விசாரணை அறிக்கை வருகிற 12ம் தேதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிக்கையிலும், அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட கணிசமான எண்ணிக்கையிலான ஊழியர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந் நிலையில் தலைமைச் செயலக ஊழியர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருந்த புதிய விதிமுறைகள் மாநிலம்முழுவதிலும் உள்ள அரசு அலுவலகங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதுதவிர சனிக்கிழமைகளில் அரசுஅலுவலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறையை ரத்து செய்வது குறித்தும் அரசு பரிசீலித்து வருவதாகத்தெரிகிறது.