பா.ஜ.க கூட்டணி: முடிவெடுக்க முடியாமல் தடுமாறுகிறது மதிமுக
வேலூர்:
பா.ஜ.க.வுடன் கூட்டணியைத் தொடர்வது குறித்து முடிவெடுப்பதை வரும் 29ம் தேதிக்கு மதிமுக ஒத்திவைத்துவிட்டது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து திமுக விலகுவதாகவும், இனி பிரச்சனைகளின் அடிப்படையில் மட்டுமேஆதரவு அளிக்கப்படும் எனவும் 20ம் தேதி திமுக அறிவித்தது. இதனையடுத்து மத்திய அமைச்சரவையிலிருந்துதிமுக அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர்.
இந் நிலையில், கூட்டணி குறித்த தனது நிலைப்பாட்டை அறிவிப்பதில் மதிமுக தடுமாறி வருகிறது. முதலில் இதுதொடர்பான கட்சியின் முடிவு திங்கள் கிழமை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அன்றுவைகோவை சிறையில் சந்தித்துவிட்டுத் திரும்பிய மத்திய அமைச்சர்கள் செஞ்சி ராமச்சந்திரன், கண்ணப்பன்ஆகியோர் முடிவு இன்று (புதன்கிழமை) அறிவிக்கப்படும் என அறிவித்தனர்.
இந் நிலையில் கடந்த மூன்று நாட்களாக வேலூர் சிறையில் தன்னை சந்திக்க வரும் கட்சிப் பிரமுகர்களுடனும் இதுகுறித்து வைகோ விவாதித்து வந்தார்.
இன்று மதிமுக அவைத் தலைவர் கணேசன், மத்திய அமைச்சர்கள் கண்ணப்பன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர்வேலூர் சிறையில் வைகோவைச் சந்தித்து விவாதித்தனர். இச் சந்திப்புக்குப் பின் சென்னையில் மதிமுக உயர் மட்டக்குழுக் கூட்டம் நடப்பதாக இருந்தது.
ஆனால், வைகோவை சந்தித்துவிட்டு வெளியே வந்த எல்.கணேசன் வேலூர் சிறை வாயிலில் நிருபர்களிடம்பேசுகையில், சென்னையில் 29ம் தேதி கட்சியின் மாவட்டச் செயலாளர்களின் கூட்டம் நடத்தி, இது குறித்துவிவாதிக்கப்படும். கூட்டணியில் நீடிப்பதா, வேண்டாமா என்பது தொடர்பாக அன்று முடிவு வெளியிடப்படும்என்றார்.
அதற்குள் பொடா மறு ஆய்வுக் குழு வைகோவை விடுவித்துவிடும் என்ற நம்பிக்கையில் முடிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இல்லாவிட்டால் ஜாமீனி கோரி வெளியே வந்துவிட்டு முடிவை அறிவிக்கும்யோசனையில் வைகோ உள்ளதாக மதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொடா விவகாரத்தில் மத்திய அரசின் தயவு தேவைப்படுவதால் இந்த நேரத்தில் கூட்டணியை முறிப்பதுநல்லதல்ல என மு.கண்ணப்பன் கூறுவதாகவும் தெரிகிறது.
பா.ம.க. நாளை முடிவு:
இந் நிலையில் பா.ஜ.க. கூட்டணியில் தொடர்வதா, இல்லையா என்பது குறித்து நாளை பாமக தனது முடிவைஅறிவிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.