மதிமுகவும் விலகியது: 2 அமைச்சர்களும் நாளை ராஜினாமா
சென்னை:
திமுகவைப் பின்பற்றி மதிமுகவும் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறியது. இதையடுத்து அக்கட்சியின் சார்பில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள அமைச்சர்கள் கண்ணப்பன், செஞ்சி ராமச்சந்திரன்ஆகியோர் நாளை பதவி விலகுகின்றனர்.
பொடா சட்டம் உள்ளிட்ட பல விஷயங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தலைமை தாங்கும் பா.ஜ.க.அமைதி காத்து வந்ததாலும், திமுகவின் கோரிக்கைகளை ஏற்காமல் அலட்சியம் செய்து வந்ததாலும், மாநில பா.ஜ.கதலைவர்கள் மோதல் போக்கைக் கடைப்பிடித்ததாலும் கூட்டணியிலிருந்தும், அமைச்சரவையிலிருந்தும்விலகுவதாக பத்து நாட்களுக்கு முன் திமுக அறிவித்தது.
ஆனால் மற்றொரு முக்கிய கட்சியான பாமக கூட்டணியிலிருந்து விலக மாட்டோம் என்று கூறி விட்டது.
இந் நிலையில் இன்று மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும்நிர்வாகிகளின் கூட்டம் நடந்தது. அவைத் தலைவர் எல்.கணேசன் தலைமையில் நடந்த இக் கூட்டத்தில் 34 மாவட்டசெயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டணியில் இருந்து விலகிவிட வைகோ முடிவு செய்திருப்பதை கணேசனும் அமைச்சர்கள் கண்ணப்பன், செஞ்சிராமச்சந்திரன் ஆகியோரும் அறிவித்தனர். இதனை மாவட்டச் செயலாளர்களும் நிர்வாகிகளும் கரகோஷம் எழுப்பிவரவேற்றனர்.
இதையடுத்து கூட்டணியில் இருந்து விலகிவிடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்துவேலூர் சிறைக்குச் சென்று வைகோவைச் சந்திக்கும் கண்ணப்பனும் ராமச்சந்திரனும் இன்று மாலை டெல்லிசெல்கின்றனர்.
நாளை தங்களது ராஜினாமா கடிதங்களை பிரதமர் வாஜ்பாயிடம் அளிக்கவுள்ளனர்.
வைகோவையும் சேர்த்து மதிமுகவுக்கு நான்கு எம்.பிக்கள் உள்ளனர்.












Click it and Unblock the Notifications