நெடுமாறன் ஜாமீனில் வெளியே வருவாரா?: 5ம் தேதி தீர்ப்பு
செங்கல்பட்டு:
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறனின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஜனவரி 5ம் தேதி வழங்கப்படவுள்ளது.
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பழ. நெடுமாறனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கிவிட்டது. இன்னொரு வழக்கில் திண்டுக்கல் சார்பு நீதிமன்றமும் ஜாமீன் வழங்கியது.
ஆனால், ஆலந்தூர் நீதிமன்ற வழக்கில் மட்டும் அவருக்கு இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை. விடுதலைப் புலிகளின் முன்னணித் தலைவர்களில் ஒருவராக இருந்த கிட்டு குறித்து புத்தகம் வெளியிட்டது தொடர்பாக நெடுமாறன் மீது மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தான் ஆலந்தூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் தன்னை ஜாமீனில் விடக் கோரி ஆலந்தூர் நீதிமன்றத்தில் நெடுமாறன் மனு தாக்கல் செய்திருந்தார்.
மனு மீதான விசாரணை முடிவடைந்து, தீர்ப்பு வழங்கப்பட வேண்டிய நிலையில் நீதிபதியை தமிழக அரசு திடீரென இடமாற்றம் செய்துவிட்டது. இதையடுத்து பூந்தமல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நெடுமாறனின் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அங்கு அவரது ஜாமீன் மனு நிராகக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் நெடுமாறனின் வழக்கறிஞர் சந்திரசேகர் ஜாமீன் மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
நெடுமாறனின் ஜாமீன் மனு நேற்று விசாரணைக்கு வந்தது. இதற்காக கடலூர் சிறையிலிருந்து நெடுமாறன் செங்கல்பட்டுக்குக் கொண்டு வரப்பட்டார்.
இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்ததால் 5ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி பெரிய கருப்பையா அறிவித்தார்.
நெடுமாறனுக்காக ராஜ்குமார் பிரார்த்தனை:
இந் நிலையில் வார இதழுக்கு பேட்டி அளித்துள்ள கன்னட நடிகர் ராஜ்குமார், தன்னை வீரப்பனிடம் இருந்து விடுவித்து அழைத்து வந்த நெடுமாறன் விடுதலைக்காக பிரார்த்திப்பதாகக் கூறியுள்ளார்.
இருதய நோயாளியான அவர் தன்னை மிகவும் கஷ்டப்பட்டு வீரப்பனிடம் இருந்து மீட்டதாகவும், அவர் இப்போது சிறையில் வாடுவது மனதில் பெரும் பாரமாக அழுத்துவதாகவும் ராஜ்குமார் கூறியுள்ளார்.