மகாவீர் ஜெயந்திக்கு விடுமுறை வேண்டும்: ஜைனர்கள் கோரிக்கை
சென்னை:
மகாவீர் ஜெயந்தியை அரசு விடுமுறையாக மீண்டும் அறிவிக்க வேண்டும் என்று ஜைன மதத்தினர் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக அரசு விடுமுறை நாட்கள் 22லிருந்து 16 ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலப் புத்தாண்டு தினமான ஜனவரி 1 உள்ளிட்ட பல விடுமுறை நாட்கள் ரத்து செய்யப்பட்டு பணி நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றில் மகாவீர் ஜெயந்தி, தெலுங்குப் புத்தாண்டு ஆகியவை சில.
மகாவீர் ஜெயந்தி நாளை மீண்டும் அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று ஜைன மதத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக ஜைன மதத்தினர் நடத்தும் கல்வி நிறுவனங்களின் சார்பில் முதல்வர் ஜெயலலிதாவுக்குக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளது.
அந்தக் கடிதங்களில், 2004ம் ஆண்டுக்கான தமிழக அரசு விடுமுறை நாட்களின் பட்டியலில் மகாவீர் ஜெயந்தி இடம் பெறவில்லை. ஆனால், கிறிஸ்தவ மதத்தினரின் 2 பண்டிகைகளுக்கும், இஸ்லாமியர்களின் 2 பண்டிகைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஜைன மதத்தினரின் குருவான பகவான் மகாவீர் அவதரித்த ஏப்ரல் 3ம் தேதி விடுமுறை நாளாக அறிவிக்கப்படாதது மிகுந்த வருத்தத்தைத் தருகிறது. எனவே கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் ஏப்ரல் 3ம் தேதியை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று அவற்றில் கூறப்பட்டுள்ளது.
ஸ்ரீராஜஸ்தானி ஜெயின் சமாஜம் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களின் சார்பில் இந்த கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications