வைகோ மீதான வழக்கு வாபஸ் கிடையாது: தமிழக அரசு உறுதி
சென்னை:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீதான பொடா வழக்கை வாபஸ் பெறும் பேச்சுக்கே இடம் கிடையாது என்று அரசுவழக்கறிஞர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மதுரை திருமங்கலத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதாக கூறி வைகோ உள்ளிட்ட 9மதிமுகவினர் மீது பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். தற்போது அனைவரும் ஜாமீனில் விடுதலையாகி உள்ளனர்.
தங்கள் மீதான புகார்களைத் தள்ளுபடி செய்து விடுதலை செய்யுமாறு கோரி வைகோ உள்ளிட்ட 9 பேரும் பொடா மறு ஆய்வுக்குழுவிடம் மனு செய்திருந்தனர். இவர்களது மனுக்களை விசாரணை செய்த பொடா மறு ஆய்வுக் குழு கடந்த 8ம் தேதி பரபரப்புதீர்ப்பை வெளியிட்டது.
அதில், வைகோ உள்ளிட்டவர்கள் மீதான வழக்கில் பூர்வாங்க ஆதாரம் இல்லை. எனவே அவர்கள் மீதான பொடா வழக்கைவாபஸ் பெறுவது தொடர்பான பணிகளை பொடா சிறப்பு நீதிமன்ற அரசு வழக்கறிஞர் மூலம் உடனடியாக மேற்கொள்ளுமாறுதமிழக அரசின் தலைமைச் செயலருக்கு, பொடா மறு ஆய்வுக் குழு உறுப்பினர்கள் உத்தரவிட்டனர்.
இருப்பினும் இந்த உத்தரவை ஏற்க முடியாது என்று சென்னை பூந்தமல்லி பொடா நீதிமன்ற அரசு வழக்கறிஞர் ஜெயக்குமார்திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கருத்து கூறுகையில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராகஆதாரங்களைத் திரட்டிய பிறகே வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தங்களை பொடா வழக்கில் கைது செய்தது தவறு என்று கூறி குற்றம் சாட்டப்பட்டவர்கள் (வைகோ உள்ளிட்டவர்கள்) பொடாசிறப்பு நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் மனு செய்தனர். தங்களை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரினர். ஆனால் இரண்டுநீதிமன்றங்களும் இவர்களது மனுவைத் தள்ளுபடி செய்து விட்டன.
இவர்கள் மீதான வழக்கில் பூர்வாங்க ஆதாரம் இருந்த காரணத்தால்தான் இரு நீதிமன்றங்களும் குற்றம் சாட்டப்பட்டவர்களின்மனுக்களைத் தள்ளுபடி செய்தன. ஆனால் இந்த வழக்கில் பூர்வாங்க ஆதாரம் இல்லை என்று கூறி பொடா மறு ஆய்வுக் குழுகூறுவதை எப்படி ஏற்க முடியும்?
உயர் நீதிமன்றமே ஆதாரம் உள்ளதாகக் கூறியுள்ள நிலையில் பொடா மறு ஆய்வுக் குழுவின் உத்தரவை ஏற்று, குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான வழக்கை வாபஸ் பெற நான் பொடா நீதிமன்றத்தை அணுகினால் என்ன காரணத்தைச் சொல்லிவழக்கை வாபஸ் பெறுவது? பொடா நீதிமன்றம் விளக்கம் கேட்டால் என்ன சொல்லுவது?
எனவே, நான் வழக்கை தொடர்ந்து நடத்தப் போகிறேன். யார் உத்தரவிட்டாலும் வழக்கை வாபஸ் பெற மாட்டேன். பொடாநீதிமன்றம் எடுக்கும் முடிவுக்கே நான் கட்டுப்படுவேன்.
பொடா ஆய்வுக் குழுவுக்கு நான் கட்டுப்பட்டவன் அல்ல. பொடா ஆய்வுக் குழு நீதிமன்ற வரம்புக்குள் வராது, எனவே அதன்உத்தரவை ஏற்காவிட்டால் அவமதிப்பு வழக்கும் தொடர முடியாது. ஏப்ரல் 15ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில், பொடா மறுஆய்வுக் குழுவின் உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்படும் என்றார் ஜெயக்குமார்.