வீரப்பன் கூட்டாளிகளின் கருனை மனு: ஜனாதிபதியை இன்னும் அடையவில்லை
டெல்லி:
வீரப்பன் கூட்டாளிகளின் கருணை மனு குடியரசுத் தலைவர் மாளிகையை வந்தடையவில்லை என்று குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் செய்தித் தொடர்பாளர் கான் தெரிவித்தார்.
1993ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பாலாறு அருகே நடந்த கண்ணிவெடி தாக்குதலில் கர்நாடக போலீஸார் உள்பட21 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக வீரப்பன் கூட்டாளிகள் சைமன், ஞானபிரகாஷ், மாதய்யா,பிலேந்திரா ஆகியோர் பிடிபட்டனர். இவர்களுக்கு மைசூர் தடா நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது.
இதை எதிர்த்து 4 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் 4பேரின் ஆயுள் தண்டனையை தூக்கு தண்டனையாக மாற்றி தீர்ப்பளித்தது. இதனையடுத்து, 4 பேரும் குடியரசுத்தலைவருக்குக் கருணை மனு அனுப்பினர்.
கருணை மனு தொடர்பாக குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் இருந்து பதில் வராததால் 16ம் தேதிநிறைவேற்றப்பட வேண்டிய தூக்குத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. இந் நிலையில், அப்துல் கலாமின் செய்தித்தொடர்பாளர் கான் செய்தியாளர்களிடம்,
4 பேரின் கருணை மனுவும் குடியரசுத் தலைவருக்கு இன்னும் வந்து சேரவில்லை. முதல் கட்டமாக உள்துறையிடம்கருத்து கேட்கப்படும். அதன் பின்னரே குடியரசுத் தலைவருக்கு கருணை மனுக்கள் வரும் என்று கூறினார்.