அமைதி பேச்சுவார்த்தை குறித்து தமிழ் எம்.பிக்களுடன் பிரபாகரன் ஆலோசனை
கொழும்பு:
அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடர்வது குறித்து தமிழ் தேசிய கூட்டணியை எம்.பிக்கள் 22 பேருடன்விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் இன்று ஆலோசனை நடத்தினார்.
கிளிநொச்சியில் உள்ள புலிகளின் அரசியல் பிரிவு தலைமையகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் புலிகளின்அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன், உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மன் உள்ளிட்ட இயக்கத்தின்முன்னணி தலைவர்களும் கலந்து கொண்டனர்.
எம்.பிக்கள் மத்தியில் பிரபாகரன் பேசுகையில்,
தமிழ் தேசியம் என்ற கொள்கையின் அடிப்படையிலேயே தமிழ் மக்கள் உங்களுக்கு வாக்களித்துள்ளார்கள்.அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு நீங்கள் உழைக்க வேண்டும். ஒருவரின் தேசப்பற்று என்பதுகுடும்பம், கிராமம், மாகாணம் மீது கொண்டுள்ள பற்றிலிருந்து வருவதாகும். மாகாணத்தின் மீது கொண்ட பற்று,ஆதிக்க வெறியாக மாறினால் அது ஆபத்தானதாகும் என்றார்.
தடைபட்டுள்ள அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவது குறித்தும், தமிழர் பகுதிகளின் சுயாட்சிகோரிக்கையை முன் எடுத்துச் செல்வது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
பின்னர் எம்.பிக்களுக்கு பிரபாகரன் மதிய விருந்தளித்தார்.