3 கன்னியாகுமரி மீனவர்களைக் காணவில்லை
நாகர்கோவில்:
கடலில் மீன் பிடிக்கச் சென்ற கன்னியாகுமரியைச் சேர்ந்த 3 மீனவர்களைக் காணவில்லை என்று மாவட்ட ஆட்சித்தலைவரிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 14ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் கொளச்சல் பகுதியைச் சேர்ந்த 6 மீனவர்கள் படகு ஒன்றில் மீன் பிடிக்ககேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள பேய்ப்பூர் என்ற இடத்திற்குச் சென்றனர். நடுக்கடலில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அந்த வழியாக சென்ற கப்பல் ஒன்று, படகு மீது மோதியதாகத் தெரிகிறது.
இதில் படகு உடைந்தது. மீனவர்களும் கடலில் மூழ்கினர். இதில் ஆண்ட்ரூஸ் என்ற மீனவர் இறந்தார். ஜான்என்பவர் நீந்திக் கரை சேர்ந்தார், அலெக்சாண்டர் என்பவரை கடலோர காவல்படையினர் மீட்டனர். மற்ற 3 பேரானவிஜயன், நிக்ஸன், மரிய ஜான் ஆகியோரின் நிலை என்னவானது என்பது தெரியவில்லை.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜேஷ் லக்கானியிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. கடலில் மூழ்கிய3 மீனவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.