மதுரை, தேனி, நாமக்கல்லில் இடி மின்னலுடன் கன மழை
சென்னை:
மதுரை, தேனி, நாமக்கல், பெரியகுளம், உசிலம்பட்டி ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கன மழைபெய்துள்ளது.
தமிழகம் முழுவதிலும் ஆங்காங்கே கோடை மழை பெய்து மக்களைக் குளிர்வித்து வருகிறது. இந் நிலையில் தென்மாவட்டங்களில் சில பகுதிகளிலும் மேற்குப் பகுதி மாவட்டங்களில் சில இடங்களிலும் நல்ல மழை பெய்துள்ளது.
மதுரையில் 101 டிகிரி அளவுக்கு வெயில் கொளுத்தியது. இந் நிலையில் நேற்று இரவு இடி மின்னலுடன் கன மழைபெய்தது. சுமார் ஒன்றரை மணி நேரம் பெய்த இந்த மழையினால் கோரிப்பாளையம், பெரியார் பேருந்துநிலையம் உள்ளிட்ட சில இடங்களில் தண்ணீர் வெள்ளம் போல தேங்கிக் கிடந்தது.
இதேபோல, உசிலம்பட்டியிலும் சுமார் அரை மணி நேரம் இடி மின்னலுடன் கன மழை பெய்தது. இதில் பலஇடங்களில் மரங்கள் கீழே விழுந்தன. தேனியில் ஒரு மணி நேரம் பெய்த மழையால் சாலைகளில் நீர்பெருக்கெடுத்து ஓடியது. பெரியகுளத்தில் கனத்த மழையுடன், சூறாவளிக் காற்றும் வீசியது.
நாமக்கல் மாவட்டம் சிக்கல் பகுதியில் கனத்த மழையால் கடைகள், வீடுகளுக்குள் நீர் புகுந்து விட்டது. இதனால்பொருட்கள் சேதமடைந்தன.
இந்த கோடை மழை இப்பகுதிகளில் இன்றும், நாளையும் தொடரலாம் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம்தெரிவிக்கிறது.