தமிழகத்தில் 55 முதல் 60 சதவீத வாக்குப் பதிவு
சென்னை:
தமிழகத்தில் பல லட்சம் பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதால், அவர்கள்வாக்களிக்க முடியாமல் போய்விட்டது. இதனால் இன்று நடந்த மக்களவைத் தேர்தலில் ஏராளமானவர்கள்வாக்களிக்க வந்தும் கூட 55 முதல் 60 சதவீத வாக்குகளே பதிவாகின.
தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகள் உள்பட, 16 மாநிலங்களில் உள்ள 182 தொகுதிகளில் இன்றுஇறுதிக் கட்ட வாக்குப் பதிவு நடந்தது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 5 மணிக்குமுடிவடைந்தது.
வாக்களிக்க மக்கள் கூட்டம், கூட்டமாக வந்தனர். பல இடங்களில் காலை 6 மணி முதலே பெரும்எண்ணிக்கையிலான மக்கள் வாக்குச் சாவடிகளில் வரிசையில் நின்றனர். கிராமப் பகுதிகளைவிடநகர்ப் புறங்களில் வாக்குப் பதிவுக்கு மக்கள் அதிக ஆர்வம் காட்டினர்.
நேரம் செல்லச் செல்ல, தங்களது ஓட்டை வேறு யாராவது கள்ள ஓட்டு போட்டுவிடுவார்கள் என்ற அச்சத்தாலும்,ஆளுங்கட்சிக்கு எதிராக மிக பலமான அலை வீசுவதாலும் மக்கள் காலையிலேயே அதிக அளவில் வாக்குச்சாவடிகளில் திரண்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆனால், வாக்குப் பதிவு ஆரம்பித்தது முதலே ஓட்டு போட வந்தவர்களில் பலரின் பெயர்கள் வாக்காளர்பட்டியலில் இல்லாததால் திருப்ப அனுப்பப்பட்டனர். இதனால் வாக்குச் சாவடிகளின் வெளியே பெரும் பரபரப்பும்,கலாட்டாக்களும், சாலை மறியல்களும் நடந்தன.
அடையாள அட்டைகளுடன் வாக்களிக்க வந்தவர்கள் கூட திருப்ப அனுப்பப்பட்டனர். காரணம், வாக்காளர்பட்டியலில் பெயர் இல்லை. வாக்களிக்க வந்தவர்களில் சுமார் 20 சதவீதம் பேரால் வாக்களிக்க முடியவில்லை.இதனால் பெரும் எண்ணிக்கையில் மக்கள் வாக்குச் சாவடிகளுக்கு வந்தும் கூட, 55 முதல் 60 சதவீதம் அளவுக்கேவாக்குகள் பதிவாகியுள்ளன.
இதுவரை இல்லாத அளவுக்கு லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்துநீக்கப்பட்டிருந்தது மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து இந்து நாளிதழ் ஆசிரியர் என்.ராம் கூறுகையில், வாக்காளர் பட்டியலில் பெரும் முறைகேடுநடந்துள்ளது. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும், பெரும் எண்ணிக்கையில்வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்ட இடங்களில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்றார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை காரணமாக பல பகுதிகளில் வாக்குப் பதிவு பாதிக்கப்பட்டுள்ளது.
தர்மபுரியில் தேர்தல் பணிக்குச் சென்ற அதிகாரி மாரடைப்பால் காலமானர். மேட்டூர் மின் வாரிய ஊழியரானஅக்பர் பாட்ஷாவுக்கு அரூர் பகுதியில் தேர்தல் பணி தரப்பட்டிருந்தது. அங்கு பணியில் ஈடுபட்டிருந்தபோது அவர்திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தார்.
வேலூர் ஆரிமுத்து மோட்டூர் என்ற இடத்தில் 19 அரவாணிகள் கூட்டமாக வந்து வாக்களித்தனர்.அரவாணிகளுக்கு தேர்தல் கமிஷன் வாக்குரிமை அளித்துள்ளது இதுவே முதல்முறையாகும்.
தமிழகத்தில் மொத்தம் 4.72 கோடி பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்கள். 39 தொகுதிகளிலும் 571வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மாநிலம் முழுவதும் 45,729 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுமொத்தம் 50,000 மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் ஓட்டுப் பதிவு நடந்தது.
சென்னையின் மூன்று தொகுதிகள், கடலூர், கோவை, மதுரை, பெரியகுளம், திருநெல்வேலி,செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட 13 தொகுதிகள் மிக அதிகமான பதற்றம் நிறைந்தவையாகஅடையாளம் காணப்பட்டு அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
பாண்டிச்சேரியில் அசம்பாவித சம்பவங்கள் ஏதுமின்றி வாக்குப் பதிவு நடந்தது. ஆனால், பாமக வேட்பாளர்ராமதாஸ் தன்னை மிரட்டியதாக பாஜக வேட்பாளர் லலிதா குமாரமங்கலம் புகார் கூறியுளளார். மேலும், பாஜகதொண்டர்களை பாமகவினர் மிரட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
வாக்கு எண்ணிக்கை 13ம் தேதி நடக்கவுள்ளது.
சிவகாசியில் அமைச்சர் இன்பத்தமிழனால் ஏற்பட்ட கலாட்டா தவிர தமிழகத்தில் வாக்குப் பதிவுஅமைதியாகவே நடந்து வருகிறது.
வாக்காளர்கள் பட்டியலில் நடந்த குளறுபடிகளில் தொடர்புடைய அதிகாரிகள் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தேர்தல் ஆணையர் மிருத்யுஞ்சய் சாரங்கி இன்றுநிருபர்களிடம் தெரிவித்தார். இன்பத்தமிழன் விவகாரம் குறித்து மாவட்ட கலெக்டரிடம் விளக்கம்கேட்டுள்ளதாகவும் கூறினார்.