சட்டசபை தேர்தலிலும் ஜெ. தோற்பது உறுதி: வைகோ
தஞ்சாவூர்:
2006ம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டசபைத் தேர்தலிலும் முதல்வர் ஜெயலலிதா தோற்பது உறுதி என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
காவிரி டெல்டா விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் செயல்திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே காவிரி ஆணையக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டி, ஜூன் 12-ம் தேதி பாசனத்துக்காகத் தண்ணீர் திறந்துவிடுவது என முன்பிருந்த நிலையை மன்மோகன் சிங் ஏற்படுத்தித் தர வேண்டும்.
ஜெயலலிதா வெளியிடும் கட்டணக்குறைப்புகள் உள்ளிட்ட அறிவிப்புகளை வரவேற்கிறோம். தனது நடவடிக்கைகளை திரும்பப் பெறுவதன் மூலம், தான் செய்தது தவறு என்று ஒப்புக்கொண்டிருக்கிறார்.
சட்டசபைக்கு 2006-ம் ஆண்டில் தேர்தலை நடத்தினாலும், அதற்கு முன்னரே நடத்தினாலும் ஜெயலலிதா படுதோல்வியடைவது உறுதி.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நிலையான அரசாக விளங்கும். பொடா சட்டம் கட்டாயம் திரும்பப் பெறப்படும். இலங்கையில் அமைதிப் பேச்சுவார்த்தை வெற்றி பெற இந்தியா தன் பங்கையாற்ற வேண்டும். புலிகள் மீதான தடையை நீக்குவது இன்றியமையாததாகும்.
இக் கோரிக்கையை மத்திய அரசு இப்போது ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் காலப் போக்கில் தனது கருத்தை மாற்றிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது என்றார் வைகோ.
சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்தயைடுத்து வைகோ இன்றிரவு அமெரிக்கா செல்கிறார்.












Click it and Unblock the Notifications