இவர் யார்?: எஸ்.ஆர்.பிக்கு ஓ.பி. கேள்வி
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவை பதவி விலகச் சொல்ல எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் யார் என பொதுப் பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவரது அறிக்கை விவரம்:
தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், தமிழக முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்று சட்டசபையில் நேருக்கு நேர் சொல்வேன் என்று கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மக்கள் தீர்ப்பு என்பது தண்டனையாம்.. அந்த தண்டனை முதலமைச்சர் பதவியிலிருந்து விலகுவதுதானாம்- சொல்லுகிறார் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம்.
நாடாளுமன்றத் தேர்தலில் தோற்றதற்காக, தமிழக முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் பதவி விலக வேண்டும் என்று சொல்லும் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் மற்ற மாநிலங்களுக்கும் இதே நீதியை வற்புறுத்துவாரா?
பாலசுப்பிரமணியம் நியாயவாதியாக இருந்தால், தமிழ்நாட்டுக்குச் சொல்லும் இதே நீதியை காங்கிரஸ் ஆட்சி நடத்தும் கேரளா, பஞ்சாப், உத்தராஞ்சல் மாநிலங்களுக்கும் உபதேசிப்பாரா?
கேரளத்தில் ஒரு இடத்தில் கூட காங்கிரஸ் ஜெயிக்கவில்லை. பஞ்சாப், உத்தராஞ்சலில் படுதோல்வி அடைந்திருக்கிறது.
பாலசுப்பிரமணியத்துக்கு நாடாளுமன்றத் தேர்தலுக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கும் உள்ள வேறுபாடு தெரியாமல் போனது விநோதமாக இருக்கிறது, வேடிக்கையாக இருக்கிது.
தமிழகத்தை ஐந்தாண்டு காலம் ஆட்சி செய்ய வேண்டும் என்ற தீர்ப்பை 2001ம் ஆண்டில் புரட்சித் தலைவிக்கு மக்கள் வழங்கியிருக்கிறார்கள். இவ்வாறு இருக்க முதல்வர் பதவி விலக வேண்டும் என்று சொல்ல இவர் யார் என்று கேட்க விரும்புகிறேன்.
இவ்வாறு ஓ.பியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.