செம்மலை, இன்பத்தமிழனின் கட்சி பதவி பறிப்பு
சென்னை:
அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள செம்மலையின் அதிமுக மாவட்ட செயலாளர் பதவியையும் ஜெயலலிதா பறித்துள்ளார்.
செம்மலை மற்றும் ஜீவானந்தம் ஆகியோரை அமைச்சர் பதவியிலிருந்து இன்று ஜெயலலிதா திடீரென்று நீக்கினார். இந் நிலையில் செம்மலை, அமைச்சர்கள் இன்பத்தமிழன், அண்ணாவி மற்றும் இரண்டு பேரிடம் இருந்து அதிமுக மாவட்டச் செயலாளர் பதவியையும் பறித்துள்ளார் ஜெயலலிதா.
சேலம் நகர் மாவட்டச் செயலாளராக இருந்த செம்மலையிடம் இருந்து அந்தப் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக முன்னாள் அமைச்சர் விஜய்லட்சுமி பழனிச்சாமி மாவட்டச் செயலாளராக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடு புகழ் விளையாட்டுத்துறை அமைச்சர் இன்பத்தமிழனிடம் இருந்து விருதுநகர் மாவட்டச் செயலாளர் பதவியை முதல்வர் பறித்துள்ளார். அவருக்குப் பதிலாக வினாயகமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தலின்போது சிவகாசி மதிமுக வேட்பாளர் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் மீது துப்பாக்கியால் சுட்டு பரபரப்பை உண்டாக்கியவர் இன்பத்தமிழன்.
அதேபோல ஏற்கனவே, ஒதுக்கி வைக்கப்பட்டு, தேர்தல் நேரத்தில் மட்டுமே முக்கியத்துவம் பெறும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து ராமச்சந்திரன் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக வேடியப்பன் எம்.எல்.ஏ. நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து பால்வளத்துறை அமைச்சர் அண்ணாவி நீக்கப்பட்டுள்ளார்.
அவருக்குப் பதிலாக சமீபத்தில் மக்களவைத் தேர்தலில் திருச்சியில் போட்டியிட்டுத் தோற்ற பரமஜோதி மா.செவாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழக மருத்துவச் சேவைக் கழகத் தலைவராகவும் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் சேலத்தில் போட்டியிட்டுத் தோற்ற பழனிச்சாமி, தமிழக சிமெண்ட் வாரியத் தலைவராகவும், சேலம் ஊரக மாவட்டச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
எம்பிக்கள் தலைவர் நாராயணன்:
நாடாளுமன்ற அதிமுக எம்.பிக்கள் குழுவின் தலைவராக பி.ஜி. நாராயணனை ஜெயலலிதா நியமித்துள்ளார்.
மக்களவையில் அதிமுகவுக்கு ஒரு எம்.பியும் இல்லை. ஆனால், மாநிலங்களவையில் 12 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் நாராயணன் குழுத் தலைவராகவும் வழக்கறிஞரும் எம்பியுமான ஜோதி துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கொறடாவாக மலைச்சாமி, பொருளாளராக தினகரன், செயலாளராக கோகுல இந்திரா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications