ஸ்டிரைக்: உயர் நீதிமன்றம் ஸ்தம்பிப்பு
சென்னை:
மதுரை உயர்நீதிமன்ற கிளையின் அதிகார வரம்புக்குள் அதிகமான மாவட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றவழக்கறிஞர்கள் இன்று முதல் காலவரையற்ற நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் உயர் நீதிமன்றப் பணிகள் முழுமையாக ஸ்தம்பித்துப் போயுள்ளனன. நீதிபதிகள் பணிக்கு வந்திருந்தனர். ஆனால், ஒரு சில அரசுவழக்கறிஞர்கள் தவிர மற்ற வழக்கறிஞர்கள் யாரும் நீதிமன்றங்களில் வழக்குகளை நடத்த வரவில்லை.
மதுரையில் அமைக்கப்பட்டுள்ள உயர் நீதிமன்றக் கிளை அடுத்த மாதம் 24ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்திறந்தால், தங்களது பிஸினஸ் அடிபடும் என்பதால், இதைத் திறக்க விடாமல் சென்னை வழக்கறிஞர்கள் பல தடைகளை ஏற்படுத்தி வந்தனர்.
இதனால் தென் மாவட்ட மக்களின் கனவான இத் திட்டம் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது. இதை எதிர்த்து தென்மாவட்டங்களில் பொது மக்களும், வழக்கறிஞர்கள் பல வகையான போராட்டங்களை நடத்தினர்.
இதையடுத்து மதுரை கிளை ஒரு வழியாக கட்டி முடிக்கப்பட்டது. பல முறை ஒத்தி வைக்கப்பட்ட அதன் திறப்பு விழா ஜூலை 24ம் தேதிநடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் மதுரை கிளைக்கு அதிக மாவட்டங்களை ஒதுக்கக் கூடாது என்று கூறி சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம்பிரச்சனை கிளப்பியுள்ளது.
இது தொடர்பாக விவாதிக்க சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் அவசரமாக கூட்டப்பட்டது.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சங்கத் தலைவர் பிரபாகரன், மதுரை கிளைக்கு 16 மாவட்டங்களை ஒதுக்கப் போவதாகசெய்திகள் வெளியாகியுள்ளன. இது சரியல்ல. இதனால் சென்னை நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் வெறும் 14 மாவட்டங்கள் மட்டுமேஇருக்கும்.
மதுரை கிளைக்கு கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, மதுரை ஆகிய 8மாவட்டங்களை மட்டுமே ஒதுக்க வேண்டும். மற்ற மாவட்டங்கள் சென்னை உயர் நீதிமன்ற எல்லைக்குள்தான் தொடர்ந்து நீடிக்கவேண்டும்.
மதுரை கிளைக்கு ரிட் மனுக்களை விசாக்கும் அதிகாரம் வழங்கப்படக் கூடாது. சென்னை உயர் நீதிமன்றம் மட்டுமே ரிட் மனுக்களைவிசாரிக்கும் அதிகாரத்தைக் கொண்டிருக்க வேண்டும்.
மதுரை நீதிமன்ற கிளைக்கு அதிக மாவட்டங்களை ஒதுக்கியதன் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தின் பாரம்பரியம், பெருமை, கெளரவம்பாதிக்கப்பட்டு விடக்கூடாது.
இதை வலியுறுத்தி புதன்கிழமை (இன்று) முதல் காலவரையற்ற நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளோம் என்றார் பிரபாகரன்.
தொடக்கத்தில், மதுரை கிளையை திறக்கக் கூடாது என்று கோரி சென்னை வழக்கறிஞர்கள் பலவித போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.இப்போது கிளை திறப்பு உறுதியாகி விட்டதால், வேறு வழியின்றி மாவட்டங்களை ஒதுக்குவதை பிரச்சினையாக்கி போராட்டத்தைதொடங்கியுள்ளனர் சென்னை வழக்கறிஞர்கள்.
மதுரை நீதிமன்றக் கிளைக்கு 9 நீதிபதிகள் நியமிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது. இதில் 2 நீதிபதிகள் நிரந்தரமாகவும், 7 நீதிபதிகள்சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து சுற்று அடிப்படையில் மதுரை கிளையில் பணியாற்றுவார்கள்.
135 சென்னை உயர் நீதிமன்ற ஊழியர்கள் ஏற்கனவே மதுரைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுவிட்டனர். அதே போல கடந்த 5 மாதங்களாகஉயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் தென் மாவட்ட வழக்குகளின் கோப்புகளில் எம் என்ற முத்திரைபதிக்கப்பட்டுள்ளது.
இந்த முத்திரை கொண்ட வழக்குகள் எல்லாம் மதுரைக்கு மாற்றப்படவுள்ளன.












Click it and Unblock the Notifications