கைதிகள் காவல் நீட்டிப்புக்கு வீடியோ கான்பரன்சிங்
![]() |
சென்னை:
விசாரணைக் கைதிகளின் காவல் நீட்டிப்பை எளிதாக்குவதற்காக நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் இடையே வீடியோ கான்பரன்சிங் முறையை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
முதல் கட்டமாக 9 சிறைகளில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த முறையை முதல்வர் ஜெயலலிதா இன்று துவக்கி வைத்தார்.
விசாரணைக் கைதிகள் காவல் நீட்டிப்புக்காக 15 நாட்களுக்கு ஒருமுறை சிறைச் சாலையில் இருந்து நீதிமன்றங்களுக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும். அவர்களை பாதுகாப்புடன் அழைத்துச் சென்று, திரும்ப அழைத்து வரும் பணியில் ஆயுதப் படை போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இதற்காக ஏராளமான போலீஸ் வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்காக அரசு கோடிக்கணக்கான பணம் செலவிட்டு வருகிறது.
இதனைத் தவிர்க்க, சிறையில் இருந்த வண்ணமே கைதிகளின் காவலை நீட்டிக்க வீடியோ கான்பரன்சிங் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி நீதிமன்றத்தில் நீதிபதி வீடியோ திரையில் கைதிகளைப் பார்த்து விசாரிக்க முடியும். சிறையில் இருந்தவண்ணம் கைதிகளும் நீதிபதியிடம் பேச முடியும்.
இந்தத் திட்டம் சென்னை, மதுரை உள்ளிட்ட 7 மத்திய சிறைகளிலும் வேலூர், திருச்சியில் உள்ள பெண்கள் சிறைகளிலும் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தச் சிறைகளுக்கும், இச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளின் வழக்குகளை விசாரித்து வரும் 270 நீதிமன்றங்களுக்கும் இடையே பிராண்ட் பேண்ட் வீடியோ லிங்குகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதற்காக ரூ. 8.61 கோடி செலவிடப்பட்டுள்ளது.
இந்த முறையின் கீழ், முதன்முதலாக, வேலூர் சிறையில் உள்ள கைதி ராஜமாணிக்கம் என்பவருக்கு 14 நாட்கள் காவலை நீட்டித்து சென்னை பெருநகர 4வது நடுவர் மன்ற நீதிபதி தீனதயாளன் வீடியோ மூலம் உத்தரவு பிறப்பித்தார்.
இதனை கோட்டையில் முதல்வர் ஜெயலலிதாவும் அதிகாரிகளும் பார்வையிட்டனர்.
இந்த முறை மூலம் காவல் நீட்டிப்புக்காகக் கொண்டு செல்லப்படும் கைதிகள் தப்புவது, கைதிகளை எதிரிகள் தாக்குவது போன்ற அசம்பாவிதங்களை தவிர்க்க முடியும். மேலும் போலீஸ் வாகனங்களுக்கு ஆகும் டீசல் செலவு, போலீசாருக்குத் தரப்படும் பேட்டா போன்றவற்றையும் மிச்சப்படுத்த முடியும்.
இதனால் ஆண்டுக்கு அரசுக்கு ரூ. 10 கோடி வரை மிச்சமாகும்.













Click it and Unblock the Notifications