ஆளுநர்கள் நீக்கத்துக்கு பாஜக கடும் எதிர்ப்பு
சென்னை:
4 மாநில ஆளுநர்களை மத்திய அரசு நீக்கி இருப்பது ஜனநாயகத்துக்கு எதிரானது என்று பாஜக தலைவர் வெங்கையா நாயுடு கூறினார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
மத்திய அரசு 4 மாநில ஆளுநர்களை பதவிநீக்கம் செய்திருப்பது ஜனநாயகத்துக்கு எதிரானது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். 4 ஆளுநர்களிடமும் விளக்கம் எதுவும்கேட்கப்படவில்லை. அந்த மாநில அரசுகளிடமும் விவாதம் நடத்தப்படவில்லை.
அவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். தொடர்பு இருப்பதாக காரணம் சொல்கிறார்கள். பல ஆளுநர்கள் காங்கிரஸ் தொடர்புள்ளவர்களாகவும், பலர் கம்யூனிஸ்டு தொடர்புஉள்ளவர்களாகவும் இருக்கும்போது ஆர்.எஸ்.எஸ். தொடர்பு இருந்தால் என்ன தவறு?
காங்கிரஸ் அல்லாத மாநில அரசுகளின் ஆளுநர்களை மாற்றிவிட்டு அந்த அரசுகளை கலைப்பது, காங்கிரஸ்கட்சிக்கு கைவந்த கலை. இப்போது காங்கிரஸ் தனது பழைய விளையாட்டுகளை மீண்டும் தொடங்கி விட்டது.
கோவா, உத்தரப்பிரதேசம், குஜராத், அரியானா ஆகிய 4 மாநிலங்களிலும் காங்கிரஸ் அல்லாத ஆட்சி நடந்துகொண்டிருப்பதற்காகவே அந்த ஆளுநர்கள் நீக்கப்பட்டு உள்ளார்கள்.
இந்த விஷயத்தில் இதற்கு முன் காங்கிரஸ் கட்சியை கம்யூனிஸ்டு கட்சிகளும், திமுகவும் விமர்சித்தது உண்டு.இப்போது காங்கிரஸ் அரசின் இந்த நடவடிக்கைக்கு என்ன சொல்ல போகிறார்கள்?
ஆளுநர்கள் மாற்றத்தில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து சர்க்காரியா கமிஷன் பரிந்துரைசெய்துள்ளது. வாஜ்பாய் தலைமையிலான அரசு சர்க்காரியா கமிஷன் அறிக்கையை முழுமையாக கடைப்பிடித்தது.காங்கிரஸ் அரசு நியமித்த ஆளுநர்களை நாங்கள் அப்போது நீக்கவில்லை. மாறாக ஒரு சிலருக்கு பதவி நீடிப்புவழங்கினோம்.
காங்கிரஸின் இந்த நடவடிக்கை நமது நாட்டு ஜனநாயகத்தின் மீதும், பாரம்பரியத்தின் மீதும் தொடுக்கப்பட்டதாக்குதல் ஆகும். இந்த பிரச்சினை பற்றி நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்.
மேலும் வரும் கூட்டத் தொடரில் விலைவாசி உயர்வு, தீவிரவாதிகள் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள்குறித்து பேசுவோம்.
இதுகுறித்து நாளை மறுநாள் (திங்கள்கிழமை) நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் முடிவுசெய்யப்படும் என்றார் வெங்கையா நாயுடு.












Click it and Unblock the Notifications