தலைநகர் சென்னையிலும் கூரை பள்ளிகள் !
சென்னை:
கும்பகோணத்தில் நடந்த கொடூர தீவிபத்துக்குப் பின்னர் மாநிலம் முழுவதும் உள்ள கூரைப் பள்ளிகள் குறித்துபேசப்படுகிறது. ஆனால் தலைநகர் சென்னையிலேயே பல பகுதிகளில் கூரைகளில் இயங்கும் பள்ளிகள் இருந்துவருவது அதிர்ச்சியை கொடுக்கும் தகவலாகும்.
தமிழகத்தில் பள்ளிகள் தொடங்குவது முன்பு மாதிரி இல்லை. யார் வேண்டுமானாலும் பள்ளிகளைத் தொடங்கிவிடலாம், அது மொட்டை மாடியாக இருந்தால் கூட பரவாயில்லை என்ற நிலைதான் தற்போது உள்ளது.
1,200 சதுர அடி இருந்தால் போதும், கீற்றுக் கொட்டகையோ அல்லது ஆஸ்பெஸ்டாஸ் கொட்டகையோ போட்டுவிட்டு பள்ளியைத் தொடங்கி விடுகிறார்கள். பள்ளியைத் தொடங்கிய பிறகுதான் முக்கால்வாசிப் பேர் அரசுஅனுமதிக்கு விண்ணப்பிக்கிறார்கள்.
அனுமதி வழங்க வேண்டிய அதிகாரிகளை முறையாக "கவனித்து" விடுவதால் இந்த "தற்காலிக" பள்ளிகளுக்குநிரந்தர அங்கீகாரம் சுலபமாகக் கிடைத்து விடுகிறது. இதுதான் கும்பகோணம் பள்ளியிலும் நடந்துள்ளது.
கும்பகோணம் கிருஷ்ணா பள்ளியைப் போல தமிழகம் முழுவதிலும் நூற்றுக்கணக்கான பள்ளிகள் இருக்கலாம்.ஆனால் தலைநகர் சென்னையிலும் கூட பல பள்ளிகளில் கூரைகள் கீழ் இயங்கி வருவதுதான் வேதனை.
முகப்பேர் கிழக்குப் பகுதியில் சன்பீம் பள்ளி என்ற தனியார் பள்ளி உள்ளது. இங்கு பி.கே.ஜி. முதல் நர்சரிவரையிலான வகுப்புகள் உள்ளன. இந்த பள்ளி இருப்பது வெட்ட வெளியிலோ அல்லது பக்கா கட்டிடத்திலோஅல்ல. ஒரு வீட்டின் மாடியில்தான் இந்த "பள்ளி" அமைந்துள்ளது.
இரண்டு பேர் சேர்ந்து நுழைய முடியாத அளவுக்கு ஒரு நுழைவாயில் இந்தப் பள்ளிக்கு செல்ல உள்ளது. தீவிபத்துஏதாவது ஏற்பட்டால் கும்பகோணம் கதிதான் இங்கும். இந்தப் பள்ளிக்கு அரசு அங்கீகாரம் உள்ளது என்பதுதான்கொடுமையிலும் கொடுமை.
இதேபோல, புறநகரான பள்ளிக்கரணையில் உள்ள அரசு மேல் நிலைப் பள்ளியில் முற்றிலும் கீற்றுக்கொட்டகையில்தான் வகுப்புகள் நடந்து வருகின்றன. பள்ளி முழுவதுமே கீற்றுக் கொட்டகை இருப்பதால்அப்பகுதி மக்கள் கும்பகோணம் கோரத்தை நினைத்து தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப அஞ்சுகிறார்கள்.
இதேபோல, தரமணி பகுதியிலும் 3 பள்ளிகள் கீற்றுக் கொட்டகையிலும், எடக்கு முடக்கான சந்துகளிலும்அமைந்துள்ளன. இந்தப் பள்ளிகள் அனைத்துமே அதி பயங்கரமான ஆபத்தை சுமந்து கொண்டுள்ளன என்பதில்சந்தேகமே இல்லை.
தலைநகரிலேயே ஆபத்துக்கள் இப்படிக் காத்துக் கொண்டிருக்கையில், கும்பகோணம் கிருஷ்ணா பள்ளியின் விதிமீறல்கள் அரசின் கண்களுக்குத் தெரியாமல் போனதில் ஆச்சயம் இல்லைதான்!